பொதுத்தேர்வு எழுதவுள்ள +2 மாணவர்களுக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து

 
anbumani

பொதுத்தேர்வு எழுதவுள்ள +2 மாணவர்களுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாளை பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் தொடங்குகின்றன. இதனையொட்டி தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து இருந்தார். இந்நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பொதுத்தேர்வு எழுதும் பிளஸ் 2 மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 வகுப்பு பொதுத்தேர்வுகள் நாளை (திங்கள்கிழமை) தொடங்குகின்றன. தமிழகம் மற்றும் புதுவையில் 7 ஆயிரத்துக்கும் கூடுதலான பள்ளிகளைச் சேர்ந்த மொத்தம் 8 லட்சத்து 51,303 பேர் இத்தேர்வுகளில் பங்கேற்கின்றனர். அவர்கள் அனைவரும் இத்தேர்வில் சாதனைகளை படைப்பதற்காக எனது உளமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பொதுத்தேர்வுகளின்போது கடைபிடிக்கப்பட வேண்டிய முக்கியமான விஷயங்களில் முதன்மையானது பதற்றத்தைக் குறைப்பதாகும். தேர்வில் நன்கு தெரிந்த விடைகளை முதலில் எழுத வேண்டும். அனைத்துத் தேர்வுகளையும் அச்சமின்றி மாணவர்கள் எழுத வேண்டும். அதேநேரத்தில் மாணவர்களின் படிப்புக்கு பெற்றோர்கள் அனைத்து வகையிலும் உதவியாக திகழ வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.