மருத்துவர் நல்லி யுவராஜ் மறைவுக்கு அன்புமணி ராமதாஸ் இரங்கல்!

 
anbumani anbumani

சமூக முன்னேற்ற சங்கத்தின் முன்னாள் தலைவர் நல்லி இராமநாதன் அவர்களின் புதல்வரும், தமிழ்நாட்டின் புகழ்பெற்ற எலும்பியல் மற்றும் முதுகு தண்டுவட அறுவை சிகிச்சை வல்லுநருமான நல்லி யுவராஜ் அவர்கள் உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனையும், துயரமும் அடைந்தேன் என அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எனது இளம் வயதில் இருந்தே மருத்துவர் நல்லி யுவராஜ் அவர்களை நன்கு அறிவேன். எங்களின் குடும்பத்தில் ஒருவராகவே அவர் வளர்ந்தார். சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் எலும்பியல் துறை பேராசிரியராக பணியாற்றிய காலத்தில் பல்வேறு சாதனைகளை படைத்திருக்கிறார். சென்னை அரசு பொது மருத்துவமனையில் முதுகு தண்டுவடவியல் சிகிச்சை பிரிவை அவர்தான் உருவாக்கி தலைமை ஏற்று நடத்தினார்.அதற்காக அப்போது மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக பணியாற்றிய நான் நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு உதவிகளை செய்தேன். 


வணிக நோக்கமின்றி மருத்துவ சேவை செய்து வந்த நல்லி யுவராஜ் அவர்களின் மறைவு மருத்துவதுறைக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். சமூகத்தில் பொருளாதார அடிப்படையில் பின் தங்கிய நிலையில் உள்ள மக்களுக்கு எந்த பலனையும் எதிர்பார்க்காமல் மருத்துவ சேவை வழங்கியவர் அவர். மருத்துவர் நல்லி யுவராஜ் அவர்களின் மறைவு தனிப்பட்ட முறையில் எனக்கு பெரும் இழப்பாகும். மருத்துவர் நல்லி யுவராஜ் அவர்களை இழந்து வாடும் அவரது தந்தை பெரியவர் நல்லி இராமநாதன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.