திமுக-தேமுதிக கூட்டணி தாமதமானாலும் மகிழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ்
தேமுதிக கூட்டணி முன்கூட்டியே நடைபெறவேண்டியது தாமதமாக நடந்தாலும் மகிழ்ச்சிதான் என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.

சென்னை அடையாறு குமாரராஜா முத்தையா மேல்நிலைப் பள்ளியில் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதற்கட்டமாக 41.85 கோடி மதிப்பீட்டில் 654 உயர் தொழில் நுட்ப ஆய்வகங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, “ இன்று சட்டமன்ற இறுதி நாள் அல்ல, நிறைவான நாளாக பார்க்கிறோம். அனைத்து உறுப்பினர்களும் கேட்ட கேள்விகளுக்கு அமைச்சர்கள் முறையாக பதில் அளித்தனர். கலைஞர் மீது மரியாதை வைத்திருந்தவர் கேப்டன். தேமுதிக கூட்டணி முன்கூட்டியே நடைபெறவேண்டியது, தாமதமாக நடந்தாலும் மகிழ்ச்சி. எதிர்க்கட்சிகள் எங்களை என்ன வெற்றி கூட்டணி எனவா? பாராட்ட போகிறார்கள் அனைத்து கூட்டணிகளுக்கும் விமர்சனம் வரத்தான் செய்யும்” எனக் கூறினார்.

