ஜூன் 7ம் தேதி பள்ளிகள் திறப்பு - அன்பில் மகேஷ் அறிவிப்பு..

 
anbil magesh

கோடை விடுமுறைக்கு பின்பு ஜூன் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.  வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க கோரி கோரிக்கை எழுந்த நிலையில் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழக முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல் 29ம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.   விடுமுறை முடிந்து  மீண்டும் பள்ளிகள் 6 முதல் 12ம் வகுப்புகளுக்கு ஜூன் 1ம் தேதியும், 1 முதல் 5ம் வகுப்புகளுக்கு ஜூன் 5 ஆம் தேதியும் திறக்கப்படுமென அறிவிக்கப்பட்டிருந்தது.  இந்த நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளி திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என தொடர்ந்து  கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து அமைச்சர் அன்பில் மகேஷிடம் மீண்டும் கேட்கப்பட்டபோது, பள்ளிகள் திறக்கப்படும் தேதியில் எந்த மாற்றமும் இல்லை;  ஒருவேளை பள்ளிகள் திறப்பதில் மாற்றம் இருந்தால் முதலமைச்சர் அறிவிப்பார் என்றும் தெரிவித்திருந்தார்.  இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், கோரிக்கைகளின் மீது பரிசீலனை நடைபெற்று வருவதாகவும், முழு விவரம் இன்று அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். 

அதன்படி இன்று அறிவிப்பு வெளியிட்ட அமைச்சர் அன்பில் மகேஷ், “முதல்வரின் ஆணைக்கிணங்க கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மாணவர்களின் உடல்நலத்தைக் கருத்தில் கொண்டு ஜூன் மாதம் 7-ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்” என்று தெரிவித்தார்.