போலீசாருக்கு வந்த அவசர மெசேஜ்! - மே 2-ம் தேதி முதல் விடுப்பு ரத்து; டிஜிபி வெளியிட்ட அதிரடி தகவல்!
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் மே 4ஆம் தேதி நடைபெறுகிறது. அன்று மாலையே தேர்தல் முடிவுகளும் வெளியாகி, தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்க போவது யார் என்பது தெரிந்துவிடும்.
இதனையொட்டி, தமிழ்நாடு டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் காவல்துறையினருக்கு முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில், "தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், 2ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை காவலர்கள், காவல்துறை அதிகாரிகள் யாரும் விடுப்பு எடுக்கக் கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், விடுப்பில் உள்ள காவலர்களும் இரண்டாம் தேதி முதல் விடுப்பை நீட்டிக்க கூடாது என்றும், மகப்பேறு விடுப்பு, குழந்தை பராமரிப்பு விடுப்பு, கல்வி விடுப்பு, முறையான காரணங்களுக்கு பெறப்பட்ட மருத்துவ விடுப்பு ஆகிய விடுப்பில் இருக்கும் காவலர்களுக்கு மட்டுமே இதிலிருந்து விலக்கு அளிக்கப்படும் எனவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவுறுத்தலானது களப் பிரிவுகள் மற்றும் சிறப்பு பிரிவுகளில் பணியாற்றக்கூடிய அனைத்து அதிகாரிகள் காவலர்களுக்கு பொருந்தும். உயர் அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை இந்த உத்தரவை பின்பற்ற வேண்டும் எனவும் அந்த உத்தரவில் டிஜிபி தெரிவித்துள்ளார்.

