பஞ்சாப்பில் தமிழக கபடி வீராங்கனைகள் மீது தாக்குதல்- நடுவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: டிடிவி தினகரன்

பஞ்சாப்பில் தமிழக கபடி வீராங்கனைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், வீராங்கனைகளையும், பயிற்சியாளரையும் பாதுகாப்பாக தமிழகம் அழைத்து வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்று வரும் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பெண்கள் கபடி போட்டியில் பங்கேற்க சென்றிருந்த அன்னை தெரசா பல்கலைக்கழக மாணவிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதோடு, தமிழக பயிற்சியாளரையும் அம்மாநில காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் காட்சிகள் அதிர்ச்சியளிக்கின்றன.
பஞ்சாபில் பல்கலைகளுக்கு இடையேயான கபடி போட்டியில் தமிழக வீராங்கனைகள் மீது தாக்குதல் நடந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.தமிழக அணி பயிற்சியாளர் கைதாகியுள்ள நிலையில், திமுக அரசு உடனடியாக தலையிட்டு அவரை விடுவிக்க வழிவகை செய்யவேண்டும்: அதிமுக IT Wing செயலாளர் ராஜ் சத்யன் #AIADMK pic.twitter.com/qZOxpls7MH
— Idam valam (@Idam_valam) January 24, 2025
உரிய விதிமுறைகளை பின்பற்றி கபடி போட்டியை நடத்த வேண்டிய நடுவர்களே விதிமீறல்களில் ஈடுபட்டிருப்பதோடு, அதனை சுட்டிக்காட்டிய தமிழக வீராங்கனைகள் மீது தாக்குதல் நடத்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. எனவே, பஞ்சாப் மாநில அரசை தொடர்பு கொண்டு தமிழக கபடி வீராங்கனைகளை தாக்கிய நடுவர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதோடு, விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தமிழக கபடி பெண்கள் அணியின் பயிற்சியாளரையும், வீராங்கனைகளையும் பாதுகாப்பாக தமிழகம் அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.