தவெக தலைமையில் கூட்டணி... NDA கூட்டணி மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட வாய்ப்பிருக்கிறது - டிடிவி தினகரன்
மிருக பலத்துடன் இருக்கும் திமுகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் தங்களை சுய பரிசோதனை செய்ய வேண்டும். தவெக தலைமையில் நல்ல கூட்டணி அமைந்தால் திமுகவிற்கு போட்டியாக அமையும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாநகர் மாவட்ட அமமுக சார்பில் திருப்பூர் தெற்கு தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கல்லூரி சாலையில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அதிமுக உரிமை தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி மீது உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு குறித்த கேள்விக்கு உச்ச நீதிமன்ற வழக்கின் விசாரணைக்கு பிறகு அது குறித்து பேசலாம் என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “ஓய்வூதியர் திட்டம், வேலைவாய்ப்பு, மாற்றுத்திறனாளி என கூறிய 90 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு போதை பழக்கத்தால் கொலை, கொள்ளை அதிகரித்து உள்ளது. அப்படி இருந்தும் திமுக பாராளுமன்ற தேர்தலில் 39 தொகுதியில் வெற்றி பெற்றது உறுத்திக் கொண்டுள்ளது. இந்திய கூட்டணியில் இருந்த சில கட்சிகள் பிளவு பட்டுள்ளது. தவெக வரவு என எல்லாவற்றையும் ஆலோசித்து திமுகவை வீழ்த்த நினைக்கும் கட்சிகள் இதனை கண்காணிக்காவிடில் திமுகவை வீழ்த்த முடியாது. தவெக தலைமையில் பெரும் கூட்டணி அமைந்தால் இந்திய கூட்டணியை 3வது இடத்திற்கு தள்ள வாய்ப்பு உள்ளது. திமுக ஆட்சியில் பல துறைகளில் ஊழல் முறைகேடு உள்ளது. நான்கரை ஆண்டுகளில் எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பு கொடுத்தார்கள். தமிழக மக்களுக்கு எந்த பயனும் இல்லை. திமுகவை வீழ்த்த நினைக்கும் கட்சிகள் தங்களை சுயபரிசோதனை செய்தால் தான் மிருக பலத்துடன் உள்ள திமுகவை வீழ்த்த முடியும். வெற்று விளம்பர ஆட்சியாக உள்ளது. அதனை எதிர்க்கட்சிகள் சரியான முறையில் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.
அதிமுகவில் ஒரு சிலரின் சுயநலத்தால் விழுதுகள் போன்ற பலரை நீக்கி விட்டு நாங்கள் துரோகி என்கிறார்கள். 99 சதவீத தொண்டர்கள் மன வருத்தத்திலும் வேதனையிலும் உள்ளனர். சரியான முடிவு எடுக்காவிடில் தேர்தல் பாடம் தரும். செங்கோட்டையன் எங்களோடு நட்பாக உள்ளார். அதற்காக எங்களுடன் தான் பயணிக்க வேண்டும் என்பதில்லை. அவர் விருப்பம் போல் தவெகவில் இணைந்துள்ளார். நான் எதார்த்தத்தை நாட்டு நடப்பு பற்றி பொறாமை இல்லாமல் சொல்கிறேன். தவெக வளர்ந்து வரும் கட்சியாக தெரிகிறது. விஜயகாந்த் வருகை போல விஜய் வருகை ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். அவர் பல மக்கள் பெண்கள் ஆதரவை பெற்றவர். முதலில் எங்கள் கட்சியை பலப்படுத்தி வருகிறோம். தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்து வருகிறோம். விஜய் தலைமையில் நல்ல கூட்டணி அமைந்தால் ஆளும் திமுகவிற்கு போட்டியாக அமையும். 3 வது முறையாக மோடி ஆட்சிக்கு வந்தால் தான் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும் என்பதால் தான் அவர்கள் கூட்டணிக்கு சென்றோம். தொண்டர்களின் முடிவால் தற்பொழுது கூட்டணியில் இருந்து வெளியேறி உள்ளோம். பாஜக எங்களிடம் நட்போடு பேசினாலே மிரட்டுவது போல பரப்பி வருகின்றனர்” என தெரிவித்தார்.


