இன்று மாலை சென்னை வருகிறார் அமித்ஷா..!!
தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திர பிரதேசம், தெலங்கானா மாநிலங்கள் மற்றும் புதுச்சேரியின் முதலமைச்சர்கள் அல்லது பிரதிநிதிகள் கலந்துகொள்ளும் ‘தென் மாநில முதல்வர்கள் மாநாடு’ சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நாளை (ஆகஸ்ட் 20) நடைபெறுகிறது. இந்த மாநாட்டிற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமை தாங்குகிறார்.
இதனையடுத்து இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அவர் இன்று (ஆகஸ்ட் 19) மாலை டெல்லியிலிருந்து தனி விமானத்தில் புறப்பட்டு இரவு 7.40 மணிக்கு சென்னை பழைய விமான நிலையத்திற்கு வருகை புரிகிறார்.
அங்கு அவருக்கு வரவேற்பு மரியாதை அளிக்கப்பட்ட பிறகு, அங்கிருந்து காரில் புறப்பட்டு, கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதிக்குச் சென்று இரவு அங்கு தங்குகிறார். தொடர்ந்து நாளை (ஆகஸ்ட் 20) நடைபெறவுள்ள தென் மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகிறார். அதன் பின்பு பிற்பகல் 2.30 மணியளவில் ஈ.சி.ஆர் சாலை, கோவளத்தில் இருந்து காரில் புறப்படும் அமித்ஷா, மாலை 3.30 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வருகிறார்.
அதனனைத் தொடர்ந்து மாலை 3.45 மணிக்கு சென்னை பழைய விமான நிலையத்தில் இருந்து, தனி விமானம் மூலம் மீண்டும் டெல்லி புறப்பட்டு செல்கிறார். அமித் ஷாவின் சென்னை வருகை குறித்து டெல்லியில் இருந்து சென்னை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அதிகாரப்பூர்வமாக நேற்று தகவல் தெரிவிக்கப்பட்டது.

