4.5 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்த நிலையில் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம்..!!
சிவபெருமானின் அமர்நாத் குகைக்கோவில் அமைந்துள்ளது. ஸ்ரீநகரில் இருந்து 141 கிலோ மீட்டர் தொலைவில் அனந்தாக் மாவட்டத்தின் பஹல்காமில் இந்த கோவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 3 ஆயிரத்து 888 மீட்டர் உயரத்தில் அமர்நாத் குகைக்கோவில் அமைந்துள்ளது.
இந்த குகைக்கோவிலில் இயற்கையாக தோன்றும் பனிலிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அந்த வகையில் நடப்பு ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை கடந்த மாதம் 3ம் தேதி தொடங்கியது. வருகிற 28ம் தேதி வரை 57 நாட்கள் யாத்திரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கடந்த 3ம் தேதி தொடங்கிய யாத்திரையில் இதுவரை 4.5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று அமர்நாத் குகைக்கோவில் பனிலிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர்.
இந்நிலையில் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக ரத்து செயப்பட்டுள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்கு மற்றும் ரம்பன் மாவட்டப் பகுதிகளில் நிலவும் மோசமான வானிலை, மற்றும் நிலச்சரிவு அபாயம் காரணமாக, பக்தர்களின் பாதுகாப்பைக் கருதி இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

