கடைகள் 24 மணி நேரமும் திறந்திருக்க அனுமதி- கமிஷ்னர், டிஜிபிக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

 
Highcourt

கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அனைத்து நாட்களும், 24 மணி நேரமும் திறந்திருக்க அனுமதி அளித்து பிறப்பிக்கப்பட்ட அரசு உத்தரவு குறித்து அனைத்து காவல்நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப தமிழக டிஜிபி, சென்னை போலீஸ் கமிஷனர் ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அண்ணா சாலையில் ஹோட்டல்கள், திடீர் கடைகள் இரவு நேரத்திலும் நெரிசல், விபத்து  அபாயம்

பொதுமக்கள் நலன் கருதி கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள், அனைத்து நாட்களும், 24 மணி நேரமும் திறந்திருக்க அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவு கடந்த ஜூன் 4ம் தேதி முடிவடிந்த நிலையில்  மேலும் 3 ஆண்டுகளுக்கு அனுமதியை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, 10 அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்களை பணியமர்த்தி உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள், வாரத்தில் ஏழு நாட்களும், 24 மணி நேரமும் இயங்க, அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதற்கான அரசாணையை தொழிலாளர் நலத்துறை வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் டெல்லியை தலைமை இடமாக கொண்டு  செயல்படும் தேசிய ஓட்டல்கள் சங்கம் தொடர்ந்திருந்த வழக்கில் தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள் வர்த்தக நிறுவனங்கள் திறந்திருக்க அனுமதி அளித்த  அரசு உத்தரவை மீறி இரவு நேரங்களில் கடைகளை மூடும்படி காவல்துறை மிரட்டுவதாக குறிப்பிட்டிருந்தது. வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார், தமிழக டிஜிபி மற்றும் சென்னை போலீஸ் கமிஷனர் ஆகியோர்  24 மணி நேரம் கடைகளை திறந்துவைக்கலாம் என்ற அரசு உத்தரவு  குறித்து தங்கள் அதிகார வரம்பிற்குட்பட்ட அனைத்து காவல் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி தெரிவிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.