திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உட்பட 10 தொகுதிகள் ஒதுக்கீடு!

 
dmk

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உட்பட 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

மத்திய பாஜக அரசின் பதவிக்காலம் வருகிற மே மாதத்துடன் நிறைவடைகிறது. இதனையடுத்து புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்காக மக்களவை தேர்தலை நடத்தும் பணிகளில் தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் மக்களவை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 3வது முறையாக மீண்டும் ஆட்சியை பிடிக்க பாஜக தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகிறது. பாஜகவை ஆட்சியில் இருந்து இறக்க காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்தியா என்ற பெயரில் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்துள்ளன. தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில், காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்டு, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. 
 

dmk

இந்த நிலையில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உட்பட 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திமுக-காங்கிரஸ் கட்சி இடையே தொகுதி பங்கீடு இறுதியானது. இது தொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கு.செல்வபெருந்தகை அவர்களும் இன்று (9-3-2024) தொகுதி உடன்பாடுகள் குறித்து கலந்து பேசியதில், காங்கிரஸ் கட்சி, தமிழகத்தில் 9 (ஒன்பது) நாடாளுமன்றத் தொகுதிகளிலும் புதுச்சேரி நாடாளுமன்றத் தொகுதியும் என மொத்தம் 10 (பத்து) தொகுதிகளை பங்கிட்டுக் கொள்வதென முடிவு செய்யப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.