தென்காசியில் சோகம்! வகுப்பறையில் மயங்கி விழுந்து மாணவி உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் சுரண்டையில் பள்ளி வகுப்பறையில் மயங்கி விழுந்த மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் சுரண்டை சிவகுருநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரெட்டைகுளத்தை சேர்ந்த மானஷா என்பவர் 9ஆம் வகுப்பு பயின்று வந்தார். பள்ளி பாட வேளையின் போது வகுப்பறையிலேயே மயங்கி விழுந்த அவரை உடனடியாக ஆசிரியர்கள் மீட்டு சுரண்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவிக்குப் பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். எனினும் மானசா மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மாணவி மானசா நன்றாக படிக்கக்கூடிய மாணவி எனவும், அவரது தாயார் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதால் வீட்டு வேலைகளை அவரே செய்துவிட்டு பள்ளிக்கு வருவார் எனவும், இன்று பொங்கல் சட்னி செய்து சக மாணவிகளுக்கும் எடுத்து வந்தார் எனவும் ஆசிரியர்கள் வேதனையுடன் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக சுரண்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.