ஜெட் வேகத்தில் ஏறிய விமான டிக்கெட்!
பொங்கல் விடுமுறையை பயன்படுத்தி விமான நிறுவனங்கள் டிக்கெட் கட்டணத்தை பன்மடங்கு உயர்த்தியுள்ளன.

பொங்கல் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை விடப்பட்ட நிலையில் சொந்த ஊரான தென் மாவட்டங்களுக்கு சென்னை, பெங்களூர் கோவை போன்ற பெரு நகரங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர். அவர்கள் விடுமுறை முடிந்து மீண்டும் வெளியூர்களுக்கு செல்வதற்கு தயாராகி வருகிறார்கள். ஏற்கனவே ஏராளமான பொதுமக்கள் பேருந்துகள், ரயில்களில் முன்பதிவு செய்துள்ளனர். விடுமுறை முடிந்து பொதுமக்கள் வெளியூர்களுக்கு செல்ல வசதியாக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. ஆம்னி பேருந்துகளிலும் கட்டணம் பன்மடங்கு உயர்த்தப்பட்டதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் பொங்கல் விடுமுறையை பயன்படுத்தி விமான நிறுவனங்களும் டிக்கெட் கட்டணத்தை பன்மடங்கு உயர்த்தியுள்ளன. பெங்களூருவில் இருந்து சென்னைக்கான கட்டணம் ரூ.2,458-ல் இருந்து ரூ.23,459 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் இருந்து சென்னைக்கான கட்டணம் ரூ.6,160-ல் இருந்து ரூ.92,559 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. திருச்சியில் இருந்து சென்னைக்கான பயண கட்டணம் ரூ.4,461ல் இருந்து ரூ.15,337 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.


