அதிமுக பேரணி- 5,500 பேர் மீது வழக்குப்பதிவு

 
பேரணி

ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி சென்ற அதிமுகவினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Image

விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில்  கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில் கள்ளச்சாராயம் குடித்த 19 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து  கள்ளச்சாராயம் மரணம் தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசிடம் விளக்கம் கேட்டிருந்தார்.  இந்த விவகாரத்தை சுட்டிக்காட்டி  தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என்று அ.தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. 

இந்த நிலையில் தி.மு.க. ஆட்சியின் பல்வேறு முறைகேடுகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும்,  அதிகரித்து வரும் போதை பொருட்கள் புழக்கம், சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, தொடர் மின்வெட்டு, கள்ளச்சாராய மரணங்கள் உள்ளிட்ட புகார்களை  வலியுறுத்தி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், அதிமுகவினர் பேரணியாக ஆளுநர் மாளிகை நோக்கி சென்றனர். அதிமுக பேரணி தொடர்பாக 5,500 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். பேரணியில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், வளர்மதி, கோகுல இந்திரா உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக கூடுதல், பொது அமைதிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் கூட்டம் சேர்த்தல் உள்பட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.