அதிமுக எம்எல்ஏக்கள் திடீர் மாயம்: புதுச்சேரிக்கு இபிஎஸ் அவசர பயணம்..!
எப்படியாவது ஆட்சியமைக்க வேண்டும் என்ற முனைப்பில் தவெக நிர்வாகிகள் ஒவ்வொரு கட்சிகளின் அலுவலகத்தின் படிக்கட்டுகளை ஏறி, இறங்கி வருகின்றனர்.
தவெக ஆட்சியமைக்க திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளது. கம்யூனிஸ்ட்கள் மற்றும் விசிக உள்ளிட்ட கட்சிகள் இன்னமும் எந்தவித முடிவையும் எடுக்காமல் இருந்து வருகின்றன. இந்த சூழலில், தவெகவின் கோரிக்கையை ஐயுஎம்எல் நிராகரித்து விட்டது.
இது ஒருபுறம் இருக்க தவெகவுக்கு ஆதரவு அளிக்க, அதிமுக எம்எல்ஏக்களில் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தலைமையிலான ஒரு கோஷ்டி விருப்பம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இபிஎஸின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து தெரியாத நிலையில், 20க்கும் மேற்பட்ட அதிமுக எம்எல்ஏக்கள் புதுச்சேரியில் உள்ள ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ள உள்ளனர்.
சிவி சண்முகம் ஏற்பாட்டில் அதிமுக எம்எல்ஏக்கள் ஓ.எஸ். மணியன், தளவாய் சுந்தரம், மோகன், அருள்மொழி தேவன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, வெங்கடாசலம் ஆகியோர் விடுதியில் தங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த நிலையில், புதுச்சேரியில் தங்கியுள்ள அதிமுக எம்எல்ஏக்களை சந்திக்க இபிஎஸ் சென்னையில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளார். விஜய்க்கு போதிய ஆதரவு கிடைக்காத நிலையில், அவர் இது தொடர்பாக அதிமுக எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

