“கருத்துக்கணிப்புகளை கண்டு யாரும் கலங்க தேவையில்லை”- எடப்பாடி பழனிசாமி
கருத்துக்கணிப்புகளை கண்டு யாரும் கலங்க தேவையில்லை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுகவிற்கு எதிரான கருத்து கணிப்புகளை கண்டு தொண்டர்கள் மனம் தளர வேண்டாம். திமுகவின் பித்தலாட்ட நாடகம் ஒருபோதும் எடுபடாது.எல்லா கருத்து கணிப்புகளையும் உடைத்து அதிமுக இதுவரை ஆட்சி அமைத்திருக்கிறது. சில கருத்து கணிப்புகள் அதிமுக வெற்றி பெற வாய்ப்புள்ளதாக தெரிவித்திருக்கிறது. கருத்துக்கணிப்புகளை திட்டமிட்டு வெளியிடுவதற்கு பின்னால் சூழ்ச்சி இருக்க வாய்ப்புண்டு. அதிமுக 210 தொகுதிகளில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும். வாக்கு எண்ணிக்கையின்போது அதிமுக தொண்டர்கள், வேட்பாளர்கள், நிர்வாகிகள் அதீத கவனத்துடன் செயல்பட வேண்டும். திமுகவினர் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிப்பார்கள். 2011, 2016 வரலாற்றை மீண்டும் படைப்போம். எப்போதும் அதிமுகவிற்கு எதிரான கருத்து திணிப்புகளை முறியடித்தும், உண்மையான கருத்துக்கணிப்புகள் கூறும் எண்களைக்கூட கடந்தும் மகத்தான வெற்றிகளைப் பதிவு செய்வதே அதிமுகவின் வரலாறு” எனக் குறிப்பிட்டுள்ளார்.

