#BREAKING அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு தனியார் திருமண மண்டபத்தில் காலை 9.15 மணிக்கு கூடுகிறது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் ஒப்புதல் இல்லாமல் கூட்டம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தற்காலிக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து தன்னுடைய ஒப்புதல் இல்லாமல் ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு நடைபெறும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தபோது , அதிமுக ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதா ?பொதுக்குழுவை கூட்ட தலைமை நிர்வாக தலைமை கழக நிர்வாகிகளுக்கு அதிகாரம் உள்ளதா ?என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
அதேசமயம் ஓபிஎஸ் தரப்பிலோ பொதுக்குழுவுக்கு ஒப்புதல் வழங்காததால் இரு பதவிகளும் காலியாகிவிட்டதாக முன்வைத்த வாதம் தவறு என்றும், ஒட்டுமொத்தமாக உள்கட்சி தேர்தல் நடந்துள்ள நிலையில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் மட்டுமே காலியாக இருப்பதாக எப்படி கூற முடியும் என்றும் கேள்வி எழுப்பினர். இந்த சூழலில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கின் தீர்ப்பை இன்று காலை 9 மணிக்கு தள்ளி வைத்தார்.
இந்நிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கின் தீர்ப்பை வாசிக்கத் தொடங்கிய நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி,
கட்சியின் உள் விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது என கருத்து தெரிவித்துள்ளார். எனவே ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது ஈபிஎஸ் தரப்பிற்கு உற்சாகத்தை அளித்துள்ளது.