அதிமுக மாவட்டச் செயலர்கள் கூட்டம்- இபிஎஸ் பேசியது என்ன?
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் மாவட்டச் செயலர்கள் கூட்டம் நடைபெற்றது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், அக்கட்சியின் ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தைத் தொடர்ந்து, மூத்த நிர்வாகிகள் டிடிவி தினகரன் விவகாரம் குறித்தும் விவாதித்தனர். தேர்தல் தோல்விகளுக்குப் பிறகு மற்ற கட்சிகள் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதைச் சுட்டிக்காட்டிய அவர்கள், தங்கள் கட்சியும் அத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர். இது தொடர்பாக மூத்த நிர்வாகிகள் ஆலோசனை நடத்தியுள்ளதாகவும், இவ்விவகாரம் குறித்து ஒரு முடிவை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. டிடிவி தினகரனை அதிமுகவில் சேர்க்க வேண்டும் என்றும், கட்சியை வலுப்படுத்த வேண்டும் எனவும் எடப்பாடியிடம் மாவட்ட செயலாளர்கள் வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே எப்போதுதேர்தல் அறிவித்தாலும் அங்கு மீண்டும் அதிமுக வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும் என மாவட்ட செயலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். உள்ளாட்சி தேர்தல் இன்னும் 6 மாத காலம் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாகவும், தற்போது இடைத்தேர்தல் வர வாய்ப்பில்லை என்றும் இபிஎஸ் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

