பேராவூரணி பேரூராட்சியை கண்டித்து அதிமுக வருகிற 03ம் தேதி ஆர்ப்பாட்டம்

 
admk office

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேரூராட்சி மன்றத்தில் திமுக-வினரால் நிகழ்த்தப்பட்டுள்ள பல்வேறு முறைகேடுகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்காமல், தவறிழைத்த திமுக-வினருக்கு ஆதரவாக இருந்து வரும் விடியா திமுக அரசையும், பேரூராட்சி மன்ற நிர்வாகத்தையும் கண்டித்து, தஞ்சாவூர் தெற்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் வருகிற 03ம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  திமுக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், அமைச்சர்கள், உள்ளாட்சி அமைப்புகள், மாநகராட்சிகள், நகர மன்றங்கள் மற்றும் பேரூராட்சி மன்றங்களில் பதவி வகித்து வரும் திமுக-வினர் பல்வேறு மக்கள் விரோதச் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதை, பிரதான எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையிலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் என்ற முறையிலும் அவ்வப்போது நான், விடியா திமுக அரசின் கவனத்திற்குக் கொண்டுசென்ற போதிலும், அவைகள் குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், மக்கள் விரோதச் செயல்களில் ஈடுபட்டு வரும் திமுக-வினருக்கு ஆதரவாக, திரு. ஸ்டாலின் தலைமையிலான விடியா திமுக அரசு செயல்பட்டு வருவது, மக்களாட்சித் தத்துவத்திற்கு எதிரான செயலாகும் திமுக-வில், காலம் காலமாக குடும்ப ஆட்சி நடைபெற்று வருகிறது என்பதற்கு பல்வேறு உதாரணங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.

eps

தஞ்சாவூர் மாவட்டம், 'பேராவூரணி பேரூராட்சி மன்றம்' திமுக-வைச் சேர்ந்த ஒரு குடும்பத்தின் பிடியில் சிக்கி சீரழிந்து வருகிறது.பேராவூரணி பேரூராட்சி திமுக செயலாளர் பொறுப்பு, பேரூாட்சி மன்றத் தலைவர் பதவி முதலானவை ஒரு திமுக குடும்பத்தின் வசமாகி, ஒப்பந்தப் பணிகளை மேற்கொள்வதில் அரசு விதிமுறைகள் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளதோடு, ஒப்பந்தப் பணிகளை செய்யாமலேயே அதிகாரிகள் துணையுடன் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும், இதுசம்பந்தமாக விசாரணை நடத்தப்பட்டு, முறைகேடுகள் நடைபெற்றது ஊர்ஜிதம் செய்யப்பட்டு விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், இதுசம்பந்தமாக நடவடிக்கை எடுக்கவிடாமல் துறை அமைச்சர் இருந்து வருவதாகவும் தகவல்கள் தெரிய வருகின்றன.

'வேலியே பயிரை மேய்வது போல்' திமுக-வினர் அதிகாரம் மிக்க பதவிகளில் அமர்ந்துகொண்டு பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவது வெட்கக்கேடானது; வேதனைக்குரியது. இதற்கெல்லாம் பதில் சொல்லும் காலம் விரைவில் வர உள்ளது என்பதை மட்டும் இந்த நேரத்தில் உறுதிபட தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேரூராட்சி மன்றத்தில் திமுக-வினரால் நிகழ்த்தப்பட்டுள்ள பல்வேறு முறைகேடுகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்காமல், தவறிழைத்த திமுக-வினருக்கு ஆதரவாக இருந்து வரும் விடியா திமுக அரசையும், பேரூராட்சி மன்ற நிர்வாகத்தையும் கண்டித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தஞ்சாவூர் தெற்கு மாவட்டத்தின் சார்பில், 3.1.2025 - வெள்ளிக் கிழமை காலை 10 மணியளவில், பேராவூரணி பேரூராட்சி அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக அமைப்புச் செயலாளரும், திருவாரூர் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு. R. காமராஜ், M.L.A., அவர்கள் தலைமையிலும்; தஞ்சாவூர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. C.V. சேகர், Ex. M.L.A., அவர்கள் முன்னிலையிலும் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், தஞ்சாவூர் தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர்கள், கழக சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும்; மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளும், கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
குடும்ப ஆட்சி நடத்தும் விடியா திமுக அரசையும், ஊழல்கள் மலிந்துள்ள பேராவூரணி பேரூராட்சி நிர்வாகத்தையும் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், வியாபாரிகள், பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.