அதிமுக-தேமுதிக கூட்டணி இன்றே இறுதியாக உள்ளதாக தகவல்

 
admk office

மக்களவைத் தேர்தலில் அதிமுக - தேமுதிக கூட்டணி இன்றே இறுதியாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு , வேட்பாளர் பட்டியல் உள்ளிட்டவற்றை வெளியிட்டு வருகிறது.  இந்த சூழலில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் பணிகளுக்காக புதிய தேர்தல் ஆணையர்களாக சுக்வீர் சிங் சந்து, ஞானேஷ் குமார் ஆகியோர் நேற்று நியமனம் செய்யப்பட்டனர். இந்நிலையில் மக்களவை தேர்தல் தேதியை நாளை பிற்பகல் 3 மணிக்கு தேர்தல் ஆணையம் வெளியிடுகிறது. தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் மும்முரமாக பணியாற்றி வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரையில் திமுக கூட்டணி உறுதி செய்யப்பட்டு தொகுதி பங்கீடும் நிறைவு செய்யப்பட்டுள்ளது. அதிமுகவை பொறுத்தவரையில், தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்த நிலையில், மக்களவைத் தேர்தலில் அதிமுக - தேமுதிக கூட்டணி இன்றே இறுதியாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கோயம்பேட்டில் உள்ள அலுவலகத்தில் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா. ஆலோசனைக்குப் பின் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேச முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.