வேளாண் பல்கலைக்கழக முதுநிலை நுழைவுத் தேர்வு ரத்து!!

கடந்த ஜூன் 23ம் தேதி நடைபெற்ற தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக முதுநிலை நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக பல்கலை. நிர்வாகம் இ-மெயில் மூலம் தகவல் அனுப்பியுள்ளதால் தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் எழுதிய நுழைவுத் தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது அவர்களிடையே குழப்பத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
மாணவர்கள் செலுத்திய விண்ணப்பக் கட்டணம் திருப்பி வழங்கப்படுமென்றும், 2024-25ம் கல்வி ஆண்டிற்கான முதுநிலை மாணவர்கள் சேர்க்கை நுழைவுத் தேர்வு குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை மாதமே தொடங்கிவிட்ட நிலையில் மீண்டும் எப்போது நுழைவுத் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகும், அந்த தேர்வு நடைபெற்று முடிந்து எப்போது கல்லூரிகளில் சேர்வது என்பது குறித்த சந்தேகம் மாணவர்கள் இடையே உருவாகியுள்ளது.
தொழில்நுட்பக் கோளாறு மற்றும் சாஃப்ட்வேர் பிரச்னைகளால் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், 10 நாட்களில் தேர்வு குறித்து அறிவிப்பு வெளியாகும் எனவும் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதா லட்சுமி விளக்கமளித்துள்ளார். மாணவர்கள் சேர்க்கையில் தாமதம் ஏற்படாது எனவும் தெரிவித்துள்ளார்.