"புரட்சித் தலைவருக்குப் பிறகு புரட்சித் தளபதியாம்.. வெட்கமா இல்லையா? விஜய் ஜாக்கிரதையா இருக்கணும்"- கே.பி.முனுசாமி

 
kp munusamy kp munusamy

பல கட்சிகளிலிருந்து வந்த சந்தர்ப்பவாதிகளை கொண்டுள்ள தவெக தூய சக்தி அல்ல, கலப்படக்கட்சி. வாய்ப்புகளுக்காக சுற்றுகின்றவர்களிடம் விஜய் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என  அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை யில் பல்வேறு கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. தேன்கனிக்கோட்டை அதிமுக நகர செயலாளர் பழனி ஏற்ப்பாட்டில் நடந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்ப்பட்டோர் அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி ஆகியோர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். அப்போது புதியதாக கட்சியில் இணைந்தவர்கள் மத்தியில் பேசிய கே.பி.முனுசாமி, “ தவெக தூய கட்சி என பேசி உள்ளார்.. அது எப்படி தூய கட்சி, தூய்மை எப்போது என்றால் ஆட்சிக்கு வந்தால் உங்களின் நடவடிக்கை என்ன என தெரியாது, என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள் என தெரியாது, திட்டத்தை ஒழுக்கமாக நிறைவேற்றுவீர்கள் என தெரியாது.

ரசிகர்களை கொண்டு ஆரம்பிக்கப்பட்ட கட்சி தனித்துவமான கட்சி என்று சொல்லலாம். ஆனால் இப்போது தவெகவில் பலக்கட்சிகளிலிருந்து வந்தவர்கள் உள்ளனர். வந்தவர்கள் எல்லாம் சந்தர்ப்பவாதிகள் வசதிக்காகவும், புதிய தலைமை பொறுப்புக்காகவும் பதவிக்காக வந்தவர்கள். ஒருவர் லாட்டரியை இந்தியா முழுவதும் விற்பவர், முதலில் திமுகவிலும் பின்னர் விசிக, தற்போது தவெகவில் உள்ளார். மற்றொருவர் அதிமுகவிலிருந்து சென்ற செங்கோட்டையன் 53 ஆண்டுகளாக அதிமுகவில் எல்லா பதவிகளையும் அனுபவித்தார். அமைச்சராக்கியது அதிமுகவினர், பதவி கொடுத்தது அதிமுக, பொருளாதார கல்லூரிகளை வளர்த்துக்கொண்டு, வசதி வாய்ப்புகளையும், பதவிகளையும் அனுபவித்து கொண்டு அதிமுக தலைமைக்கு எதிராக பொதுவெளியில் விமர்சித்தவர். தலைமையை விமர்சித்தால் கட்சி கட்டுக்கோப்பாக இருக்குமா? இங்கு புரட்சி தலைவர் புரட்சி தலைவி என்றவர், அங்கு சென்று புரட்சி தளபதி என வெட்கமில்லாமல் பேசுகிறார். தவெக தூய கட்சி அல்ல, அது ஒரு கலப்பட கட்சி. எங்கு வாய்ப்பு கிடைக்கும் என சுத்துகின்ற கூட்டம் விஜயுடன் சென்றுள்ளது. விஜய் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்” என்றார்.