திமுக ஆட்சி அமைந்த பிறகு 2,630 கோவில்களுக்கு குடமுழுக்கு - அமைச்சர் சேகர்பாபு..!

 
1

சென்னை தங்கச்சாலையில் 100 ஆண்டுகள் பழமையான அல்லூரி வெங்கடாத்திரி சுவாமி மடம் என்ற ராமர் கோவிலுக்கு மீண்டும் குடமுழுக்கு நடத்த 26 லட்சத்து 43 ஆயிரம் ரூபாய் செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பணிகள் நிறைவடைந்ததை அடுத்து ஞாயிற்றுக்கிழமை வேத மந்திரங்கள் முழங்க குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா நடந்தது.

இந்தக் குடமுழக்கு விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்துகொண்டார். இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீதர், சென்னை மண்டல இணை ஆணையர் முல்லை, உதவி ஆணையர் சிவக்குமார், மாநகராட்சி மண்டலக்குழுத் தலைவர் ராமுலு, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் முரளி, அப்பாரஞ்சி ஆகியோரும் அமைச்சருடன் குடமுழுக்கு விழாவுக்கு வந்திருந்தனர்.

குடமுழுக்கு விழாப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர் பாபு, "முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்னர் இதுவரை 2,634 கோவில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளன. இன்று ஒருநாளில் மட்டும் தஞ்சாவூர் மாவட்டத்தில், புதுசத்திரம் காளியம்மன் கோயில், கோவை மாவட்டத்தில் சரவணம்பட்டி ரத்தினகிரி மருதாசலக்கடவுள் கோயில், தேனி மாவட்டத்தில் போடிநாயக்கனூர் பரமசிவன் கோயில் என 14 கோயில்களில் குடமுழுக்கு நடைபெற்று உள்ளது" என்றார்.