அண்ணா பல்கலைக்கழகம் முன்பு இன்று அதிமுக ஆர்ப்பாட்டம்

 
admk office

மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து இன்று அதிமுக மாணவரணி சார்பில் அண்ணா பல்கலைக்கழக வாயிலில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய ஞானசேகரன் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் உள்ளார். இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என  எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  விசாரணையின்போது சார் எனக்கூறி ஒருவரிடம் ஞானசேகரன் பேசியதாக பாதிக்கப்பட்ட மாணவி மீண்டும் உறுதி செய்துள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து இன்று காலை 8.30 மணிக்கு அதிமுக மாணவரணி சார்பில் அண்ணா பல்கலைக்கழக வாயிலில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. அண்ணா பல்கலைக்கழக வளாகம் வெளியே போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தில் கோட்டூர்புரம் காவல் ஆய்வாளர் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோர் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறை தெரிவித்துள்ளது.