"சசிகலாவுடனான சந்திப்பு யதார்த்தமானது" - வைத்திலிங்கம் பேட்டி!!
அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைந்து கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்று ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
தஞ்சை, ஒரத்தநாடு அருகே திருமண நிகழ்வில் கலந்து கொண்ட சசிகலா, ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கத்தை சந்தித்து பேசினார். அப்போது வைத்திலிங்கத்திற்கு சசிகலா
பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த வைத்திலிங்கம், "திருமண நிகழ்ச்சியில் எதார்த்தமாக சின்னம்மாவை சந்தித்தேன். அரசியல் ரீதியாக சசிகலாவை சந்திக்கவில்லை. சசிகலாவுடனான சந்திப்பு யதார்த்தமானது. ஈபிஎஸ் எப்படி முதலமைச்சரானார், எப்படி கட்சியை அபகரிக்க துடிக்கிறார் என்பது கடைக்கோடி தொண்டனுக்கும் தெரியும். அவரின் ஆணவப் போக்கிற்கு தொண்டர்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள. ஈபிஎஸ் தன்னை பாதுகாத்துக் கொள்ள கட்சியை அழிக்க நினைக்கிறார். ஓபிஎஸ் தொடர்பான ஈபிஎஸ்-ன் வார்த்தையை தொண்டர்கள் ஏற்கமாட்டார்கள். திமுக செய்யும் நல்ல திட்டங்களை பாராட்டுகிறோம் . பெண்களுக்கு ரூ.1000 வழங்கியதை வரவேற்கிறோம். அதே சமயத்தில் தாலிக்கு தங்கம் திட்டத்தை நிறுத்தியதை திரும்ப கொண்டு வர வேண்டுமென கேட்கிறோம்" என்றார்.