அதிமுகவால் கிடைத்த வெற்றியை திமுக, தன் வெற்றியாக பறைசாற்றிக் கொள்வது கேலிக்கூத்தானது!!
மருத்துவ படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு அதிமுகவின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
இதுகுறித்து அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், " அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் வரும் மருத்துவர் சேர்க்கைகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு, 27 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்காததை எதிர்த்து தமிழ்நாடு அரசின் சார்பிலும், அதிமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இந்த பிரச்சினை குறித்து முடிவு செய்ய ஒரு குழுவினை அமைக்குமாறு 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது இன்றைய வெற்றிக்கு இது அடித்தளம்.
இதன் தொடர்ச்சியாக குழு அமைக்கப்பட்டு அதன் பரிந்துரையின் அடிப்படையில் , மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியிட்ட அறிவிப்பில், அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் நிரப்பப்படும். 15 விழுக்காடு இளநிலை மருத்துவப் படிப்பிற்கும் ,50 விழுக்காடு முதுநிலை மருத்துவ படிப்பிற்கும், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு கடைப்பிடிக்கப்படும் என்று உத்தரவிட்டதற்கு அதிமுக வலியுறுத்தல் ஒரு முக்கிய காரணமாகும்.
இந்த ஆணையை எதிர்த்து சிலர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மத்திய அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று ஆணை பிறப்பித்துள்ளது. இது திமுக கழகத்தின் தொடர் போராட்டத்திற்கு தொடர் வலியுறுத்தல் கிடைத்த வெற்றி. கிட்டத்தட்ட 17 ஆண்டு காலம் மத்திய அரசில் அங்கம் வகித்து, இதற்காக ஒரு குரல்கூட எழுப்பாத திமுக; இதற்காக ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போட திமுக ; வாய்மூடி மௌனியாக இருந்த திமுக ;சுயநலத்திற்காக பொது நலத்தை தாரைவார்த்த திமுக; அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் நீண்டநாள் போராட்டத்தினால் வலியுறுத்தலால் கிடைத்த வெற்றியை தன் வெற்றியாக பறைசாற்றிக் கொள்வது கேலிக்கூத்தாக உள்ளது.
கழக ஒருங்கிணைப்பாளர் திரு. ஓ. பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோரின் அறிக்கை. pic.twitter.com/ydQOu5GiV9
— AIADMK (@AIADMKOfficial) January 8, 2022
இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 30 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், நிறைவேற்றிய தீர்மானமான 50 விழுக்காடு இட ஒதுக்கீடு மத்திய அரசு வேலை வாய்ப்பிலும், கல்வி நிலையங்களிலும் ,அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் வரும் மருத்துவர் சேர்க்கையிலும் , பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேறவும், இட ஒதுக்கீட்டில் இடம் பெறாத பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குவது ரத்து செய்யவும் அதிமுக தொடர்ந்து குரல் கொடுக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளனர்.