"ஈபிஎஸ்-க்கு அம்மா ஆத்மா தண்டனை கொடுத்து வருகிறது"- செங்கோட்டையன்

 
sengottaiyan

இன்றும் ஜெயலலிதா படம் எனது பாக்கெட்டில் இருக்கிறது. அவரது ஆத்மாதான் எடப்பாடி பழனிசாமிக்கு தண்டனை கொடுத்துள்ளது என்று கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் பேசியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், “தூய்மையான, வியக்கத்தகு ஆட்சி வேண்டும் என்று இளைஞர்களும், மகளிரும், 10 வயதுக்கு மேல் இருக்கும் குழந்தைகளும் விரும்பியதன் அடிப்படையில் தவெக ஆட்சி அமைந்துள்ளது. ஓட்டுக்கு பணம் தருவதை வீழ்த்தி, பணமே இல்லாமல் ஒரு தேர்தலை சந்திக்கும் வரலாற்றை முதன்முறையாக உருவாக்கிக் காட்டியுள்ளார் முதலமைச்சர் விஜய். மக்களின் எண்ணத்தை பிரதிபலிக்கும் திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். குறிப்பாக வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம், பெண்கள் பாதுகாப்புத் திட்டம், குழந்தைகள் போதைப்பொருட்களுக்கு அடிமையாவதைத் தடுக்கும் திட்டம், எல்லோரும் விரும்பியதைப் போல பள்ளிகள், பேருந்து நிலையங்கள் அருகே இருக்கும் மதுக்கடைகளை அகற்றும் திட்டம் ஆகியவற்றை நிறைவேற்றியுள்ளார். மக்களே வியந்து பாராட்டும் அளவுக்கு அவரது திட்டங்கள் உள்ளன.

அதிமுகவில் இரண்டாக பிளவு ஏற்பட்டுள்ளது, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எம்எல்ஏ-க்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். தலைவர் மீதும், மக்கள் மீதும் அக்கறை இல்லாதவர்களுக்கே சரிவு வரும். அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தின் போது ஜெயலலிதா படம் வேண்டாம், எம்ஜிஆர் படம் வேண்டாம், எனது படத்தை மட்டும் வைத்தால் போதும், நான்தான் அதை நிறைவேற்றிக் காட்டினேன் என்று பாராட்டு பெற்றவர் இன்று எங்கு இருக்கிறார் என்பது எல்லோருக்கும் தெரியும். இன்றும் எனது பாக்கெட்டில் ஜெயலலிதா படம் தான் இருக்கிறது. அவரது படம் வேண்டாம் என்று நினைத்தவரின் கனவு இன்று தூள்தூளாகி உள்ளது. ஜெயலலிதா ஆத்மாதான் இன்று அவருக்கு தண்டனை கொடுத்துள்ளது, என்பதை நாடே பார்த்துக் கொண்டிருக்கிறது” என்றார்.