“கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தாமல் இருங்கள்”- செல்லூர்ராஜு

 
sellurraju sellurraju

கூட்டணி குறித்த குழப்பத்தை ஏற்படுத்தாமல் இருங்கள், அரசியல் கருத்துக்களை யாரும் சொல்ல வேண்டாம் என பொதுச்செயலாளர் கூறிவிட்டார் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை அருகே அச்சம்பத்து பகுதியில் மதுரை தேனி செல்லும் சாலையில் உள்ள மந்தை திடலில் மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதி நிதியிலிருந்து ரூபாய் 10 லட்சம் மதிப்புள்ள மேற்கூரை அமைக்கும் விழா முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய செல்லூர் ராஜு, “இந்தியாவில் அகமதாபாத்தில் நடைபெற்ற விமான விபத்து நடந்ததற்கு அனைவரும் வேதனையில் உள்ளோம். விமான விபத்து நடந்ததற்கு அதிர்ச்சியில் உறைந்துள்ளோம். இறந்தவர்களின் குடும்பத்திற்கு எங்களது ஆழ்ந்த வருத்தத்தை, இரங்கலை தெரிவித்து கொள்கிறோம். பாஜக, அதிமுக கூட்டணி குறித்த கேள்விகளை எங்களது பொதுச்செயலாளரிடம் கேளுங்கள். கூட்டணி குறித்து எங்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தாமல் இருங்கள், அமித்ஷா-விடம் பேசியதும், கூட்டணி குறித்தும் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெளிவாக பேசியுள்ளார். அரசியல் கருத்துக்களை யாரும் சொல்ல வேண்டாம் என பொதுச்செயலாளர் கூறிவிட்டார்

ஒரு முன்னாள் அமைச்சரை தரக்குறைவாகவும், அதனை கேட்பவரின் காதுகள் கூசும் அளவிற்கு முதல்வர் பேசியிருக்கிறார். முதல்வர் ஸ்டாலின் மீது மக்களிடத்தில் மதிப்பு, மரியாதை இல்லை. இந்த ஆட்சியில் மக்கள் பயந்து போய் உள்ளார்கள். பொதுவிழாவில் ஒரு முதல்வர் தகுதியற்ற முறையில் பேசியது வன்மையாக கண்டிக்கக் கூடியது. எடப்பாடி மீது நாளுக்கு நாள் புகழும் மக்கள் செல்வாக்கும் இருப்பதால் முதல்வர் ஸ்டாலின் இதுபோன்று பேசி வருகிறார். மதுரையே அழகாக காட்சியளிக்க காரணம் அதிமுகவின் பல்வேறு திட்டங்களும், 8000 கோடி ரூபாய் வரை நிதி ஒதுக்கீடு செய்ததால் தான். அரசர் காலத்திற்குப் பிறகு அம்மாவின் ஆட்சியில் எடப்பாடி குடிமராமத்து திட்டத்தை கொண்டு வந்தார். அமைச்சர் மூர்த்தி மேற்கு தொகுதியில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வளர்ப்பது குறித்து நாங்கள் கவலைப்படுவதே இல்லை. மக்களுக்கு தெரியும்., அதிமுக ஆட்சியில் நாங்கள் என்ன செய்தோம் என்பது மக்களுக்கு தெரியும்” என்றார்.