“என்னை தெர்மாகோல் என ஓட்டுகின்றனர்... உண்மையில் நடந்தது இதுதான்!”- செல்லூர் ராஜூ

 
செல்லூர் ராஜு

பொறுத்தது போதும் பொங்கி எழு என மனோகரா படத்தில் வரும் வசனம் போல நான் மாநகராட்சி கூட்டத்திற்கு வந்துள்ளேன் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.

செல்லூர்

மதுரை மாநகராட்சி மாமன்றத்தின் 36 மாமன்ற கூட்டம் மேயர் இந்திராணி பொன்.வசந்த் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயன், மண்டலத் தலைவர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். மேலும் சிறப்பு விருந்தினராக மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன், அதிமுக முன்னாள் அமைச்சரும், மதுரை மேற்கு சட்டமன்ற உறுப்பினருமான செல்லூர் ராஜு சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார்கள். மாமன்ற கூட்டத்தில் மதுரை மாநகராட்சிக்கு உட்பட பகுதிகளில் 7 வகையான 201 சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கான உரிம கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளன, உரிம கட்டணம் மூன்று மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாகவும், உயர்த்தப்பட்ட உரிம கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் என அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர். பறவை, விலங்குகள் வளர்க்க 150 ரூபாயும், மாடு வளர்க்க 500 ரூபாயும், குதிரை வளர்க்க 750 ரூபாயும், ஆடு வளர்க்க 150 ரூபாயும், பன்றி வளர்க்க 500 ரூபாயும், நாய், பூனை வளர்க்க 750 ரூபாயும் உரிம கட்டணங்கள் நிர்ணயம் செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


மதுரை மாநகராட்சி கூட்டத்தில்  உரையாற்றிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர்ராஜு, “கோடைகால வருகிறது குடிநீர் பிரச்சனையை எப்படி சமாளிக்க உள்ளீர்கள்? என்னை தெர்மோகோல் என ஒட்டுகிறார்கள் அப்போது வைகை அணையில் 17 அடி தண்ணீர் இருந்தது. அதிகாரிகள் தலைமையில் வறட்சி தடுப்பு கூட்டம் நடக்கும் போது அதிகாரிகள் அழைத்து தெர்மோல் திட்டம் உள்ளது என என்னை அழைத்து சென்றார்கள்.நானும் கலெக்டரும் சென்றோம். ஆனால் ஒட்டுறது என்னை மட்டும் தான் ஒட்டுகிறார்கள்” என்றார்.

இதற்கு பதிலடியாக பேசிய மேயர் இந்திராணி, “மதுரை கரிமேடு பகுதியில் சமூதாய அரங்கத்தை  அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் திறந்த போது அந்த பகுதியை சேர்ந்த அதிமுக, அமமுக நிர்வாகிகள் சிறப்பாக செயல்படுவதாக பாராட்டினார்கள். அந்த விடியோ வைரலானது. அதை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்.மேலும் மேற்கு தொகுதியில் (செல்லூர் ராஜு தொகுதி) 10 வருடம் வராத ரோடு இப்போது வந்தது என பாராட்டுகிறீர்கள் . தொடர்ந்து அரசும் மாநகராட்சியும் மக்களுக்கு பணியாற்றி வருகிறது” என்றார்.

செல்லூர் ராஜூ

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய செல்லூர் ராஜூ, “பொறுத்தது போதும் பொங்கி எழு என மனோகரா படத்தில் வரும் வசனம் போல நான் மாநகராட்சி கூட்டத்திற்கு வந்துள்ளேன், கோயில் மாநகர் குப்பை நகராக வருகிறது, என் சட்டமன்ற தொகுதிக்குள் 22 வார்டுகள் உள்ளது, மாநகராட்சி பகுதிக்குள் சென்றால் இடுப்பு எலும்பு ஒடிந்து விடுகிறது, மீனாட்சிக்கு 6 மாதம் மட்டுமே ஆட்சி ஆனால் மேயர் 5 ஆண்டுகள் ஆட்சி புரிகிறார். அம்ரூத் திட்டத்தின் நிலை என்ன? குடிநீர் எப்போது வினியோகம் செய்யப்பட உள்ளது, வரி கட்டாதவர்களிடம் சாட்டையை சுழற்றி மேயர் வரிகளை வசூலிக்க வேண்டும், அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதல் உயரத்தில் கட்டடம் கட்டியவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், என்னை தெர்மாகூல் என ஓட்டுகிறார்கள், மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க பரிசோதனை முறையில் தெர்மாகூல் விட்டு ஆய்வு செய்தோம், வைகையாற்றில் இருந்து தெப்பக்குளத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல வேண்டும், மதுரை மாநகராட்சிக்கு சிறப்பு நிதி கேட்டுப் பெற வேண்டும், வைகையாற்றில் கழிவு நீர் கலப்பதால் மிக மோசமான நிலைக்கு சென்று கொண்டு இருக்கிறது” என்றார்.