“எங்க ஒரே எதிரி திமுக தான்... ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும், ஒரு லட்சம் உதயநிதி வந்தாலும் அதிமுகவுக்கே வெற்றி”- ஆர்.பி.உதயகுமார்
விஜய் கூட்டணிக்கு வருவார் என ஜாதகம் பார்க்க முடியாது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் அதிமுக தலைமை கழக அலுவலகத்தில் விருப்ப மனு கொடுக்கப்படும் நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தென்தமிழகத்தில் போட்டியிட வேண்டுமென அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விருப்ப மனு கொடுப்பதற்காக மதுரை ரயில் நிலையத்திலிருந்து வைகை எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் அதிமுக நிர்வாகிகளுடன் சென்னை புறப்பட்டு சென்றார்.
முன்னதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “தேர்தல் பணியை முதலில் தொடங்குவது அதிமுக தான். தென்தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி போட்டியிட வேண்டும் என விருப்பமனு கொடுக்க உள்ளேன். பீகார் தேர்தல் வரலாறு தமிழகத்திலும் ஏற்படும். மன்னராட்சி வாரிசு அரசியலுக்கு முடிவுரை எழுதப்படும். அதிமுக பொதுக்குழு கூட்டணியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கூட்டணியை முடிவு செய்யும் விவகாரத்தில் டெல்லியில் பாஜகவும், தமிழ்நாட்டில் EPS தான் முடிவு செய்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக- பாஜக கூட்டணியை கண்டு ஆளும் திமுக நடு நடுங்கி போய் உள்ளது. தேர்தல் நேரங்களில் வரும் பாராட்டுகளுக்கும், விமர்சனங்களுக்கும் பூதக்கண்ணாடி வைத்து பார்த்து அரசியல் காரணங்களை சொல்லிக் கொண்டிருக்க முடியாது. குற்றச்சாட்டும் கூற முடியாது.

எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகள் மக்களுக்கு சேவை செய்யும் கட்சிகள், ஒத்த கருத்துடைய கட்சிகள், அதிமுக -பாஜக கூட்டணியில் இணைவதை உறுதி செய்யும் வகையில் தான் பொதுக்குழு தீர்மானத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. நிச்சயமாக அது நிறைவேறும், தை பிறந்தால் வழி பிறக்கும். தவெக விஜய் உட்பட யார் யார் கூட்டணிக்கு வருவார்கள் என்று ஜாதகம் பார்க்க முடியாது. திமுகவை எதிர்ப்பவர்கள் அதிமுகவில் EPS தலைமையிலான கூட்டணியில் இணைந்தால் மக்கள் அவர்களை வரவேற்க தயாராக உள்ளார்கள். சாமி யாருக்கு வரம் தரப்போகிறது என 2026ல் மக்கள் முடிவு செய்வார்கள். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. அதிமுகவுக்கு ஒரே எதிரி திமுக, திமுக, திமுக தான். 54 வருடங்களாக எங்களுக்கு எதிரி திமுக தான். ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும், ஒரு லட்சம் உதயநிதி ஸ்டாலின் வந்தாலும் அதிமுக தலைமையிலான கூட்டணி தான் வெற்றி பெறும்” என பேசினார்.


