தேர்தலை சந்தித்த பிறகு தான் தவெகவின் வளர்ச்சி என்ன என்பது தெரியும்- ராஜேந்திர பாலாஜி

கோவையில் நடைபெறும் முன்னாள் எஸ்.பி.வேலுமணி இல்ல திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொள்ள, அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கோவை விமான நிலையம் வந்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ராஜேந்திர பாலாஜி, “மொழியை மையப்படுத்தி மத்திய அரசு அழுத்தம் கொடுத்தால் தமிழ்நாட்டில் புதிய பிரச்சனைகள் உருவாக்கும். இது அண்ணா காலத்தில் இருந்தே பெரிய போராட்டமாக உருவெடுத்து ஜவஹர்லால் நேருவால் பார்லிமெண்டிலேயே கொடுக்கப்பட்ட உறுதிமொழியின் அடிப்படையில் இரு மொழி கொள்கைதான் தமிழ்நாட்டில் இருக்கிறது. விருப்பம் இருப்பவர்கள் மூன்று மற்றும் நான்காவது மொழியை படித்துக் கொள்ளலாம். இதில் மாற்று கருத்தை மத்திய அரசு திணித்தால் தமிழ்நாட்டில் அனைத்து கட்சிகளும், போராட்டத்தில் இறங்கும். இது குறித்து எடப்பாடி பழனிச்சாமி தெளிவான அறிக்கையே வெளியிட்டு இருக்கிறார்.
எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து, அம்மா, தற்போது வரை எங்களுடைய கொள்கை இரு மொழிக் கொள்கை தான். தேவைப்படும் என்று நினைப்பவர்கள் மூன்றாவது மொழியை கற்றுக் கொள்ளலாம். ஆனால் மொழி திணிக்கப்படக் கூடாது. வழக்கத்தில் என்ன இருக்கிறதோ, அதுபடியே சென்றால் எந்த பிரச்சனையும் இருக்காது. இவர்கள் மொழி பிரச்சனையை கொண்டு வருகிறார்கள். அப்படி அது பெரிய பிரச்சினையாக உருவெடுக்கும் பட்சத்தில் நிறைய பிரச்சனைகள் உருவாக்கும். மத்திய அரசு தேவையில்லாத பிரச்சனைகளை தமிழகத்தில் உருவாக்குவதற்கு முயற்சி மேற்கொள்கிறது. அதேபோல் எந்த கட்சி வளர்ந்தாலும், அ.தி.மு.க வுக்கான தனி பெரும்பான்மை என்றும் குறையாது. தி.மு.க வை எதிர்க்கின்ற திறமையோ, வீழ்த்துகிற திறமையோ அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மட்டுமே உண்டு. மற்ற கட்சிகள் வரலாம் அதன் வரலாறுகளை, அவர்கள் தேர்தலை சந்தித்த பிறகு தான் தெரியும்.
எடப்பாடியார் தெளிவாகக் கூறியதைப் போன்று, பார்லிமென்ட் எண்ணிக்கை கூடித் தான் வரவேண்டும், குறைந்து வந்தால் ஏற்றுக் கொள்ள மாட்டோம். குறைந்தால் அண்ணா திமுக கடுமையாக எதிர்க்கும் என்பதை பொதுச் செயலாளர் தெளிவாக கூறியிருக்கிறார். தமிழகத்திற்கான நிதியை கொடுக்க வேண்டும், அனைத்து மாநிலத்திற்கும் கொடுக்கக் கூடிய சம அளவு தமிழகத்திற்கும், மத்திய அரசு கொடுக்கப்பட வேண்டும் என்பதுதான் அ.தி.மு.க வின் நிலைப்பாடு. இதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். மாநில அரசு என்ன நிதி கேட்கிறார்களோ அதை மத்திய அரசு கொடுக்க வேண்டும், அப்பொழுது தான் நல்ல திட்டங்களை செயல்படுத்த முடியும். மாபா பாண்டியராஜனை நான் பேசியது குறித்த விவாகரத்தில் எந்த பிரச்சனையுமில்லை. அந்த விவாகரம் முற்றுபுள்ளி ஆகிவிட்டது. நான் அவரை பற்றி பேசவே இல்லை. என் மீது பதியபட்ட வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. அந்த வழக்கு நடந்து கொண்டு தான் இருக்கிறது. இன்னும் தீர்ப்பு வரவில்லை” என்றார்.