பரபரப்பாக நடைபெற்ற அதிமுக பொதுக்குழு- எங்கே சென்றார் ஓபிஎஸ்?
சென்னையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஓ.பன்னீர்செல்வம் சுவாமி தரிசனம் செய்தார்.
அதிமுகவை ஒருங்கிணைப்பது, கூட்டணி குறித்த பல்வேறு மூத்த நிர்வாகிகள் இடையே பல்வேறு கருத்துகள் நிலவி வரும் நிலையில் சென்னையில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்நிலையில் முன்னாள் முதல்வரும் அதிமுக உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இன்று காலை சுவாமி தரிசனம் செய்தார்.
தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள தனது குலதெய்வமான செண்பகத்தோப்பு வனப்பேச்சி அம்மன் கோயிலில் குடும்பத்துடன் சென்று சுவாமி தரிசனம் செய்தார். அவரிடம் அதிமுக பொதுக்குழு கூட்டம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, கோயிலுக்கு வந்த இடத்தில் அரசியல் பேசக்கூடாது என பன்னீர்செல்வம் தெரிவித்தார்.