“மோடி நிதி தருவார்; அதிமுக வாக்குறுதிகளை நிறைவேற்றும்”- எம்.ஆர்.விஜயபாஸ்கர்
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பல்வேறு கட்சியினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் அதிமுக தலைமையிலான NDA கூட்டணி இந்த முறை சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளனர். கூட்டணி பேச்சு வார்த்தை இன்னும் முடிவடையாத நிலையில் கரூர் மாவட்டம் வெங்கமேடு பகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வீடு வீடாக சென்று பொதுமக்களிடையே இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குச் சேகரித்தார். இதில் பொதுமக்கள் ஆரத்தி எடுத்தனர்.

பின்னர் பிரச்சார வாகனத்தில் உரையாற்றிய எம்.ஆர் விஜயபாஸ்கர், "எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் வாக்குறுதி கொடுத்துள்ளார். அதில் குடும்பத் தலைவிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை 1000 ரூபாயிலிருந்து 2000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தலா 10,000 ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும்.ஆண்டுக்கு மூன்று சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விலையில்லாமல் வழங்கப்படும். மாணவர்களின் கல்விக்கடன்கள் அனைத்தும் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும்.நிலம் இல்லாத ஏழை எளிய மக்களுக்கு 3 சென்ட் நிலத்துடன் கூடிய கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும். மத்திய அரசு கூட்டணியில் இருக்கின்றோம், பிரதமர் மோடி நிதி தருகிறேன் என கூறியுள்ளார். அதனால் இதனை நாம் செய்து கொடுக்க முடியும்.
தற்போதைய திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. குறிப்பாகப் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. சொன்னதைச் செய்யும் இயக்கம் அதிமுக. தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்களைச் சிறப்பாக முன்னெடுக்க இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து வேட்பாளரை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுங்கள்” எனக் கேட்டுக்கொண்டார்.

