2026 தேர்தலில் தனித்து போட்டியிட திமுகவிற்கு தைரியம் இருக்கா?- கடம்பூர் ராஜூ

90% வாக்குறுதியை நிறைவேற்றியதாக முதல்வர் ஸ்டாலின் கூறுவது உண்மையாக இருந்தால் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளில் தனித்து நிற்க முடியுமா? 2026ல் சட்டமன்ற தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிட திமுகவிற்கு தைரியம் உள்ளதா? என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு கேள்வி எழுப்பியுள்ளார்.
சாத்தூர் அருகே ஒ.மேட்டுபட்டி கிராமத்தில் அதிமுக ஒன்றிய செயலாளரின் தந்தை 16-வது நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு, “இரு மொழி கொள்கைதான் எங்கள் உயிர் மூச்சு என்ற நிலைப்பாட்டில் அதிமுக உள்ளது. திமுகவினர் நடத்தும் கல்வி கூடங்களில் மும்மொழி அமல்படுத்தி வருகிறார்கள். ஆனால் இன்று அரசியலாக்கி இருமொழி கொள்கைதான் எங்கள் கொள்கை என பேசி கபட நாடகம் ஆடுகிறார்கள். திமுக ஆட்சியாளர்களின் அவலத்தை மக்கள் புரிந்து கொண்டுள்ளார்கள். 2026 சட்டமன்றத் தேர்தலில் இது எதிரொலித்து திமுக ஆட்சி வீட்டிற்கு சென்றால் தான் எனக்கு விடிவு காலம் என்ற மனநிலை மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. திமுகவினர் எதிர்க்கட்சியாக இருந்தபோது 'கோ பேக்" மோடி என்ற சொன்னார்கள், ஆளும் கட்சியாக இருக்கும் போது வெள்ளைக்குடை பிடித்து மோடியை வரவேற்றார்கள்.
திமுகவின் செயலுக்கு இன்று பாஜகவினர் கெட் அவுட் ஸ்டாலின் என எதிர் வினையாற்றுகிறார்கள், இது இயல்பானதுதான். ஒவ்வொரு காலகட்டத்திலும் தலைவர்களை இழிவுபடுத்துவது திமுகவினருக்கு கைவந்த கலை. 90% வாக்குறுதியை நிறைவேற்றியதாக முதல்வர் ஸ்டாலின் கூறுவது உண்மையாக இருந்தால் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளில் தனித்து நிற்க முடியுமா? 2026ல் சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட திமுகவிற்கு தைரியம் உள்ளதா? புதிய கல்விகொள்ளைகையை குறுகிய பார்வையில் பார்க்க வேண்டாம் என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுவது அவரது நிலைப்பாடு. அதிமுக ஆட்சியிலும் பாஜகவுடன் உறவிலும் இருந்தபோதே இருமொழி கொள்கையில் உறுதியாக இருந்தோம்.
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டு தேசிய கல்விக் கொள்கையை ஏற்க முடியாது என கூறுவதற்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு துணிச்சல் உள்ளதா? தமிழக அரசு எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு ஏற்படுத்தாமல் அரசியலாக்கி வருகிறது. மத்திய அரசுடன் மோதல் போக்குடன் இருந்துகொண்டு நிதியை பெறாமல் உள்ளனர். அதே நேரம் அவர்களுக்கு ஒரு பிரச்சனை என வரும் போது மத்திய அரசுடன் இணக்கம் காட்டுகிறார்கள். ஒரு பக்கம் கருப்புக்கொடி, ஒரு பக்கம் வெள்ளைக்கொடி காட்டுவது திமுகவின் இயல்பு. கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிதான் தீர்மானிப்பார். தவெக உள்ளிட்ட எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்பதை உரிய நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமி முடிவு செய்வார், அந்த முடிவு வெற்றிகரமாக அமையும். புகழேந்திக்கும் அதிமுகவிற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. புகழேந்தி தமிழ்நாட்டுக்காரரே இல்லை, எனவே அவர் கூறும் கருத்துக்கு பதில் சொல்லி எங்களது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை” என்றார்.