“கள்ள வாக்குகளை நம்பி உள்ள திமுகவுக்கு ஆப்பு! போலி வாக்காளர்களால் நான் தோல்வியுற்றேன்”- ஜெயக்குமார்

 
ச் ச்

நான் ராயபுரம் தொகுதியில் தோல்வியுற்றதற்கு பல காரணங்கள் இருந்தாலும், போலி வாக்காளர்கள் வாக்களித்திருப்பதும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

jayakumar

தமிழகத்தில் நாளை தொடங்க உள்ள வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணி குறித்து சென்னை பட்டினம்பாக்கத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “திமுக கூட்டணி கட்சி கூட்டத்தை நடத்திவிட்டு, அனைத்துக்கட்சி கூட்டத்தை நடத்தியதாக முதலமைச்சர் ஸ்டாலின் மார்தட்டி கொள்கிறார். வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகள் குறித்து மக்களை திசை திருப்பும் வகையில் தவறான பொய் பிரசாரத்தை ஸ்டாலின் மேற்கொள்கிறார், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையில் நியாயம் இருப்பதால் தான் அதிமுக ஆதரிக்கிறது. அனைத்து கட்சிகளுக்கும் பாக முகவர்கள் உள்ள நிலையில், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையில் சந்தேகம் இருந்தால் கேள்வி கேட்கலாம், எதிர்த்து முறையிடலாம். அப்படி இருக்கையில் திமுக ஏன் பயப்பட வேண்டும்? வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் வேண்டாம் என திமுக உச்சநீதிமன்றம் சென்றால், வேண்டும் என அதிமுகவும் உச்சநீதிமன்றத்தை நாடும். மக்களை நம்பாமல் கள்ள வாக்குகளை நம்பியுள்ள திமுகவுக்கு தேர்தல் ஆணையத்தின் SIR ஆப்பு வைக்க போவதால் திமுகவினர் கொதித்து போய் உள்ளனர்.

சிறப்பு திருத்த பணிககள் மேற்கொள்ளும் தேர்தல் ஆணையத்திற்கும் பாஜகவிற்குப் எந்த தொடர்பும் இல்லை. தேர்தல் ஆணையம் தனது வேலையை செய்கிறது. இதனை குறை கூற முடியாது. பாஜகவிற்கு நான் வக்காலத்து வாங்கவில்லை. அதிமுக, தவெக கூட்டணி குறித்து தற்போது கருத்து தெரிவிக்க முடியாது. கூட்டணி அமைந்தால் இபிஎஸ் விஜய்யை அழித்துவிடுவார் என்ற டிடிவியின் கருத்து அவருடையது. தேர்தல் நேரத்தில் தான் கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும். தேர்தலுக்கு இன்னும் 5 அமாவாசை உள்ளது, இதில் 2 அமாவாசைக்கு முன்பாக தேர்தல் களம் மாறிவிடும். நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் , ஆட்டை கடித்து மாட்டை கடித்து தற்போது அதிமுகவை விமர்சித்து வருகிறார். அவர் அதனை நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லாவிடில் தக்க பதிலடி கொடுக்கப்படும்” என எச்சரித்தார்.