“சீமான் அரசியலில் இருந்து தனிமைப்படுத்தப்படுவார்”- ஜெயக்குமார்

தமிழ்நாட்டு அரசியலில் இருந்து தனிமைப்படுத்தப்படுவார் என பெரியார் குறித்த சீமான் விமர்சனத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “மறைந்த தலைவர் குறித்து விமர்சிப்பது சரியா? சீமான் பண்பாடின்றி பேசி வருகிறார். பெரியார் குறித்து சீமான் பேசுவது மக்களை திசைதிருப்பும் செயல். பெரியார் குறித்து சீமான் பேசுவதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். தொடர்ந்து பேசினால் தமிழ்நாட்டு அரசியலில் இருந்து தனிமைப்படுத்தப்படுவார். பெரியாரை இழிவுபடுத்துவதை அதிமுக ஒருபோதும் அனுமதிக்காது. நாட்டில் விலைவாசி உயர்வு.. சட்டம் ஒழுங்கு சீர்கேடு.. பாலியல் வன்கொடுமை விவகாரம் இப்படி நாட்டில் எவ்ளோ பிரச்சனை இருக்கிறது. அதை பற்றி பேசாமல் பெரியார் சொல்லாததை சொல்லி சீமான் திசை திருப்புவது ஏன்?
தமிழ்நாட்டில் 13 மணல் குவாரிகளை திறக்க அரசு முடிவு எடுத்துள்ளதாக செய்திகள் வருகிறது. திமுக ஆட்சியில் இயற்கை வளங்கள் சூறையாடப்படுகின்றன. இது தமிழ்நாட்டை பாலைவனமாக்கும் முயற்சி. கிழக்கு கடற்கரை சாலையில் பெண்கள் அச்சுறுத்தப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகளின் அடையாளம் தெளிவாக தெரிந்துள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றார்.