அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யாவின் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!!

அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யாவின் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா என்கின்ற சத்யநாராயணன் சென்னை தி.நகர் தொகுதியில் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை எம்எல்ஏவாக இருந்தார். இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மீண்டும் போட்டியிட்டார். அப்போது அவர் தாக்கல் செய்த வேட்புமனுவில் தனது சொத்து மதிப்பு 2 கோடியை 78 லட்சம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சத்யநாராயணன் சொத்து மதிப்பை வெளியிடுமாறு கேட்டபோது, அவரின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் மதிப்பு 13 கோடியே இரண்டு லட்சம் என தகவல் வெளியிடப்பட்டது.
இதன் காரணமாக முன்னாள் எம்எல்ஏ சத்யா தனது சொத்து மதிப்பை மறைத்து தேர்தலில் போட்டியிட்டதாகவும் , அவர் மீது நடவடிக்கை எடுக்க கூறியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், இதில் முகாந்திரம் இருந்தால் விசாரணையை இரண்டு மாதங்களில் முடிக்க நீதிபதி லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில், சென்னை தியாகராய நகர் தொகுதி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சத்யாவின் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை வடபழனியில் உள்ள அவரின் வீட்டில் இன்று காலை 6.30 மணி முதல் சோதனை நடைபெற்று வருகிறது.