தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்க சென்ற அதிமுக முன்னாள் அமைச்சர்கள் - வாகனம் விபத்தில் சிக்கியதால் பரபரப்பு..

தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்க பசும்பொன் சென்று கொண்டிருந்த அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் காமராஜ் , விஜயபாஸ்கர், பாஸ்கரன் ஆகியோரின் கார்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின.
திருவாரூர் மாவட்டம் முன்னாள் அமைச்சர் காமராஜர், புதுக்கோட்டை மாவட்டம் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சிவகங்கை மாவட்டம் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் ஆகியோர் அதிமுக சார்பில் பசும்பொன்னில் நடைபெற்று வரும் தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்பதற்காக காரில் வந்து கொண்டிருந்தனர். தங்களது ஆதரவாளர்கள் உட்பட 3க்கும் மேற்பட்ட கார்களில் அவர்கள் சென்றுள்ளனர். அப்போது சிவகங்கை - மானாமதுரை சாலையில் வைகை ஆற்று பாலத்தில் வந்து கொண்டிருந்தபோது, முன்னால் சென்ற கார் திடீரென பிரேக் அடித்ததால் அவர்களது கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியது.
இதில் அமைச்சர்களுடன் வந்த ஆதரவாளர்களின் காரின் முன்பக்கம் சேதமடைந்தது. அந்த காரில் வந்த அதிமுக நிர்வாகிகள் மணிகண்டன், யோகி பாபு , கல்யாணசுந்தரம், மதியழகன், கவிச்செல்வன் ஆகிய ஐந்து பேர் காயமடைந்தனர். இதில் கார் முழுவதும் சேதமடைந்ததால் ஐந்து பேரும் அமைச்சர்களின் காரில் ஏறிச் சென்றனர். முன்னாள் அமைச்சர்கள் சென்ற கார் விபத்தில் சிக்காததால், அமைச்சர்களுக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை. அதிமுக சார்பில் பசும்பொன்னில் அஞ்சலி செலுத்துவதற்காக அதிவேகமாகச் சென்றதால் காரல் மோதி விபத்து ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். விபத்தில் சேதமடைந்த கார்கள் பாலத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. காரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.