ஐடி அதிகாரிகளை தடுத்து நிறுத்தும் அளவுக்கு திமுகவினரின் அராஜகம்- உதயகுமார்
![rb udhyakumar](https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded_original/cb034a4abdfdd1e440bd3a4c34d54b99.gif)
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டதாக முன்னாள் அமைச்சர் உதயகுமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு கொண்டு செல்லப்படும் கனிம வளங்களை தடுத்து நிறுத்தக்கோரி செங்கோட்டையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் உதயகுமார் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ண முரளி உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உதயகுமார், “தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு சமீப காலமாக கனிம வளங்களானது அதிக அளவில் செல்லப்பட்டு வருகிறது. இதனால் தமிழர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. இதனை தடுக்கவில்லை என்றால் மிகப்பெரிய விளைவுகளை தமிழக அரசு சந்திக்க நேரிடும். உரிய ஆதாரங்கள் இல்லாமல் இன்றி வருமான வரி துறையினர் இது போன்ற சோதனை நடத்த மாட்டார்கள். வருமானவரித்துறையினர் சோதனையை தடுத்து நிறுத்தும் அளவிற்கு திமுகவினரின் அராஜகம் அதிகரித்துள்ளது, இதன் மூலம் தமிழகத்தின் சட்டம், ஒழுங்கு கெட்டுப் போய் இந்த அரசை கலைக்க வேண்டும் என்ற சூழ்நிலை உருவாகிவிட்டது என்பதைத்தான் இது காட்டுகிறது” என்றார்.
தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான 40-க்கும் மேற்பட்ட இடங்களில் இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வரும் நிலையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக அவரது இல்லம் முன் திமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர். கரூரில் ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் வருமான வரி சோதனை நடைபெறும் இடத்தில் அதிகாரிகளின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது கவனிக்கதக்கது.