அமித்ஷாவை சந்திக்க டெல்லியில் தவம் கிடக்கும் இபிஎஸ்! மதிக்காத பாஜக தலைமை
இன்று அமித்ஷா எடப்பாடி சந்திப்பு நடக்கப்போவதில்லை என தகவல்கள் சொல்லப்படுகின்றது.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23 அன்று நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான ஒரு கூட்டணியும், அதிமுக மற்றும் பாஜக அங்கம் வகிக்கும் மற்றொரு கூட்டணியும் களம் காண்கின்றன. இதனிடையே, நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. மேலும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் தனித்தே களம் காண உள்ளார்.
இந்த சூழலில் அதிமுக- பாஜக தொகுதி பங்கீடு இன்னும் எட்டப்படவில்லை. இதனிடையே ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க இன்று மதியம் டெல்லி சென்றார் எடப்பாடி பழனிசாமி. ஆனால் அவரை சந்திக்க அமித்ஷா நேரம் ஒதுக்கவில்லை என இபிஎஸ் செய்தியாளர்களிடம் கூறினார். அதன்பின் எட்டரை மணிக்கு சந்திப்பதாக அமித்ஷா நேரம் கொடுத்திருந்த நிலையில் தற்பொழுது வரை எடப்பாடி பழனிச்சாமி அமித்ஷா சந்திப்பு நடைபெறவில்லை. ஹோட்டலிலேயே எடப்பாடி பழனிச்சாமி காத்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் இன்று அமித்ஷா எடப்பாடி சந்திப்பு நடக்கப்போவதில்லை என தகவல்கள் சொல்லப்படுகின்றது. நாளை டிடிவி தினகரன், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் டெல்லி வரும் நிலையில் அனைவரையும் சேர்த்து பார்த்துக்கொள்ள திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் சொல்லப்படுகின்றது. எனினும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு 10 மணிக்கு மேலும் அமைச்சர் அவர்களை சந்திக்க முயற்சி செய்து வருகிறது. அனைவரையும் பார்ப்பதற்கு முன்பாக தனியாக பார்ப்பதற்கு தீவிரமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

