இது கூட முதலமைச்சருக்கு தெரியவில்லையா? அல்லது தெரிந்தும் வேண்டுமென்றே நடிக்கிறீர்களா?- ஈபிஎஸ்
நடப்பு திட்டங்களை தேர்தல் ஆணைய நடத்தை விதிகள் கட்டுப்படுத்த முடியாது என்ற அடிப்படை விதிகள் கூட முதலமைச்சருக்கு தெரியவில்லையா? அல்லது, தெரிந்தும் வேண்டுமென்றே நடிக்கிறீர்களா? என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில், “"அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ. 1000" என்று வாய்கிழிய 2021-ல் தேர்தல் வாக்குறுதி அளித்தது யார்?அதை இன்று வரை முழுமையாக நிறைவேற்றினீர்களா மு.க.ஸ்டாலின் அவர்களே? 28 மாதங்கள் ரூ.1000 கொடுக்காமல் வஞ்சிக்கப்பட்டதை அதிமுக தொடர்ந்து சுட்டிக்காட்டிய பிறகுதானே, அரைகுறையாக திட்டத்தை துவக்கினீர்கள்? இந்த உண்மையைச் சொன்னால் எதற்கு உங்களுக்கு கோபம் வருகிறது பொம்மை முதல்வரே? "Ongoing Scheme"-களை தேர்தல் ஆணைய நடத்தை விதிகள் கட்டுப்படுத்த முடியாது என்ற அடிப்படை விதிகள் கூட பொம்மை முதல்வருக்கு தெரியவில்லையா? அல்லது, தெரிந்தும் வேண்டுமென்றே நடிக்கிறீர்களா? இப்படி உண்மைக்கு கொஞ்சம் கூட நெருக்கமற்ற Conspiracy Theory-களை மட்டுமே வைத்துக்கொண்டு, இன்னும் எத்தனை நாட்கள் பூச்சாண்டி அரசியல் செய்து மக்களை ஏமாற்றப் போகிறீர்கள்?
"எனது சகோதரிகள் கணக்கில் வரவு வைத்துள்ளேன்" என்று மார்தட்டுகிறீர்களே... அப்படியென்றால், தகுதி இல்லை என்று நீங்கள் நீக்கிய ஏறத்தாழ ஒரு கோடி தமிழ்ப் பெண்கள் உங்களுடைய சகோதரிகள் இல்லையா? Copy, Paste செய்வது, ஸ்டிக்கர் ஒட்டுவது, அஇஅதிமுக திட்டங்கள் மீது, அதன் பலன்கள் மீது சவாரி செய்வது என இப்படியே ஐந்தாண்டுகளைக் கடத்தியிருப்பது யாரென்று மக்களுக்கு தெரியாதா? இல்லந்தோறும் உங்கள் மகளிர் ராணுவப் படை செல்லும் போது, "திமுக ஆட்சி பெண்களுக்கு பாதுகாப்பான ஆட்சி" என்று சொல்லி பிரச்சாரம் செய்ய முடியுமா? சொல்லித்தான் பாருங்களேன்! திமுக எனும் ஓடாத ஓட்டை எஞ்சினை, மக்கள் விரட்டி அடிக்கப் போவது தான் இந்த சட்டமன்றத் தேர்தலின் ஒரே Narrative!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

