அதிமுக ஆட்சி அமைந்ததும் அஜித்குமார் சகோதரருக்கு விரும்பிய இடத்தில் அரசு வேலை வழங்கப்படும்- ஈபிஎஸ்
காவல் நிலையத்தில் காவல்துறையினரால் அடித்து துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட இளைஞர் அஜித்குமார் இல்லத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிசாமி நேரில் சென்று அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.1

இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில், “ஸ்டாலின் அரசின் காவல்துறை அராஜகத்தால் மரணமடைந்த திருப்புவனம் அஜித்குமாரின் இல்லத்திற்கு சென்று, அவரது தாயார் மற்றும் தம்பிக்கு ஆறுதல் தெரிவித்தேன். நகை திருட்டுக்கான குற்றச்சாட்டை முறையாக பதிவு செய்து , இந்த திமுக அரசின் காவல்துறை விசாரித்து இருந்தால், அஜித்குமாரின் விலைமதிப்பில்லாத உயிர் போயிருக்காது. எனவே, அஜித்குமாரின் கொலைக்கு முழு பொறுப்பை ஸ்டாலின் மாடல் அரசு ஏற்க வேண்டும்!
அஇஅதிமுக சார்பில் சிவகங்கை மாவட்ட கழக செயலாளரே களத்தில் நின்று போராடியும், கழக வழக்கறிஞர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தும் கழகம் அளித்த தொடர் அழுத்தத்தாலும், நீதிமன்றத்தின் கடுமையான
கண்டிப்புக்கும் இணங்கவே , வேண்டா வெறுப்பாக இந்த வழக்கை CBI விசாரணைக்கு மாற்றியுள்ளார் பொம்மை முதல்வர் மு.க.ஸ்டாலின். அஇஅதிமுக ஆட்சி அமைந்ததும் அஜித்குமாரின் தம்பி நவீன்குமார்க்கு தக்க இடத்தில் அரசு வேலை வழங்கப்படும் எனவும், அஇஅதிமுக சார்பில் ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் எனவும் தெரிவித்தேன். அஜித்குமார் குடும்பத்தாருக்கு அஇஅதிமுக என்றும் துணை நிற்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.


