ஒரே நாடு ஒரு தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்டால்தான் தமிழ்நாட்டை காப்பாற்றமுடியும்- ஈபிஎஸ்

சென்னையை அடுத்த தாம்பரத்தில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் அண்ணா தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு உரையாற்றினார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “ஒரே நாடு ஒரே தேர்தல் கண்டிப்பாக வரும். அதிமுக தொண்டர்கள் தயாராக வேண்டும். ஒரே நாடு ஒரு தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்டால்தான் தமிழ்நாட்டை காப்பாற்றமுடியும். திமுக அரசின் ஏவல்துறையாக காவல்துறையும், லஞ்ச ஒழிப்புத்துறையும் செயல்பட்டுவருகிறது. தமிழகத்தில் இரண்டரை ஆண்டு திமுக ஆட்சியில் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. திமுக ஆட்சியில் ஒரு மருத்துவக் கல்லூரியாவது கொண்டுவரப்பட்டதா? அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அம்மா மினி கிளினிக் உள்ளிட்ட திட்டங்களுக்கு மூடு விழா கண்டதும் திமுக அரசு. திமுக ஆட்சியில் போதை மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது. நாளுக்கு நாள் போதை பழக்கம் அதிகமாவதால் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகமாக நிகழ்கிறது. திமுக ஆட்சியில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. கொள்ளையடிப்பது ஒன்றுதான் திமுக அரசின் குறிக்கோள்.
தமிழகத்தில் சரியான நிர்வாகம் இல்லாததால் சுகாதாரத்துறை சீர்கெட்டுள்ளது. தமிழக அரசு மருத்துவமனைகளில் முறையான சிகிச்சை அளிக்கப்படுவதில்லை. தேவையான மருந்துகளும் இல்லை. இலாகா இல்லாத அமைச்சர் செந்தில்பாலாஜி மீது திமுக அரசு இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்? இலாகா இல்லாத அமைச்சராக செந்தில்பாலாஜி நீடிப்பதில் எந்த பயனும் இல்லை என உயர்நீதிமன்றமே தெரிவித்த பிறகும் நடவடிக்கை இல்லை. மாநகர பேருந்துகளுக்கு லிப்ஸ்டிக் அடித்து மகளிருக்கான இலவச பேருந்து என மக்களை திமுக அரசு ஏமாற்றிவருகிறது” என்றார்.