மாணவர்களின் நலன் கருதி சொன்னால்... கண்ணு காது மூக்கு வச்சு விவாதம் நடக்கிறது - எடப்பாடி பழனிசாமி
2026ல் அதிமுக செய்யப்போவதுதான் மக்களாட்சி என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

விழுப்புரத்தில் சுற்றுப்பயணத்தின்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, “மு.க.ஸ்டாலின் இப்போது தமிழ்நாட்டில் நடத்துவது குடும்ப ஆட்சி, 2026ல் அதிமுக செய்யப்போவதுதான் மக்களாட்சி. கல்லூரிகள் அமைப்பது அவசியம். ஆனால் அறநிலையத்துறையின் நிதி மூலம் தொடங்கப்படும் கல்லூரிகளில் மாணவர்களுக்கு முழு வசதி கிடைக்காது. அறநிலையத்துறை நிதியில் இருந்து கல்லூரி தொடங்கி, மாணவர்களை படிக்க வைக்க வேண்டாம் என்று நான் சொல்லவில்லை.
கோயில் நிதியில் கல்லூரி தொடங்காமல் அரசு நிதியில் கல்லூரி தொடங்க வேண்டும் என்றே கூறினேன். அறநிலையத்துறை கல்லூரில் வளர்ச்சி அடையும்போது நிதி ஒதுக்குவதில் சிரமம், அரசு கல்லூரி வளர்ச்சி அடையும்போது அரசே நிதி ஒதுக்க முடியும் என்றே பேசினேன். மாணவர்களின் நலன் கருதி சொன்னால்... கண்ணு காது மூக்கு வச்சு விவாதம் நடக்கிறது. அதிமுக ஆட்சிக்கு வந்ததும் விவசாயிகளின் 8 கோரிக்கைகளும் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும்” என பேசினார்.


