மீரா மிதுனுக்கு 2வது முறையாக பிடிவாரண்ட்..

 
meera mitun

பட்டியல் இனத்தவர்கள் குறித்து அவதூறு கருத்துக்களை பதிவிட்ட வழக்கில் நடிகை மீரா மிதுனுக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் இரண்டாவது முறையாக பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

திரைப்படத் துறையில் தாழ்த்தப்பட்டோரின் முன்னேற்றம் குறித்து சமூக  வலைதளங்களில் அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக நடிகை மீரா மிதுன், அவருக்கு உடந்தையாக  இருந்ததாக அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகியோர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி  புகார் அளித்திருந்தது. அதன்பேரில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வழக்கு பதிந்து,  சென்னை மத்திய குற்றப் பிரிவு காவல் துறை  இருவரையும் கைது செய்திருந்தது.  பின்னர்  இருவரும் ஜாமீனில் வெளியே வந்தனர்.  அதன்பின்னர் இந்த விவகாரம் தொடர்பாக இருவர் மீதும்   முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

meera mitun

இந்நிலையில் இன்று இந்த வழக்கு   நீதிபதி எஸ். அல்லி முன்பு விசாரணைக்கு வந்தபோது,  சாட்சி விசாரணை நடைபெற்றது.  அதன்படி  வழக்கின் சாட்சிகளும், மீரா மிதுனின் நண்பர் ஷாம் அபிஷேக்கும், அவரது வழக்கறிஞரும் ஆஜராகி இருந்தனர். ஆனால் மீரா மிதுனும், அவரது வழக்கறிஞரும் ஆஜராகவில்லை.  இதையடுத்து, சாட்சி விசாரணையன்று குற்றம் சாட்டபட்டவர் மற்றும் அவரது வழக்கறிஞர் யாரும் ஆஜராகாதது நீதிமன்றத்தை ஏமாற்றுவதாக உள்ளது என நீதிபதி  தெரிவித்தார்.  

meera mitun

மேலும்  நடிகை மீரா மிதுனுக்கு எதிராக ஜாமீனில் இருந்து வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்ட நிதிபதி,   வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 29ம் தேதிக்கு ஒத்திவைத்தார். முன்னதாக இதேபோன்று விசாரணைக்கு ஆஜராகாததால்,  மார்ச் 23ஆம் தேதி பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு மீரா மிதுன் கைது செய்யப்பட்டு  ஆஜர்படுத்தப்பட்டார். அதன்பிறகு தொடர்ந்து ஆஜராகி வந்த நிலையில், தற்போது மீண்டும் ஆஜராகாமல் இருந்துள்ளார். இதனால்   இரண்டாவது முறையாக மீரா மிதுனுக்கு  பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.