நடிகை மீரா மிதுன் மனநல மருத்துவமனையில் அனுமதி
நடிகை மீரா மிதுன் டெல்லி மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நடிகை மீரா மிதுன், பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசி சமூக வலத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். இது தொடர்பாக அவர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் காவல்துறையில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வன்கொடுமை தடுப்பு சட்டம், கலகத்தை தூண்டுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11ம் தேதி மத்திய குற்றப் பிரிவு அலுவலகத்தில் ஆஜராகும்படி மீரா மிதுனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. விசாரணைக்கு ஆஜராகாமல் கேரளாவில் தலைமறைவாக இருந்த மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக், 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 ம் தேதி கைது செய்யப்பட்டனர். புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக் தங்களுக்கு ஜாமீன் வழங்க கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். அவரது மனு அப்போதே தள்ளுபடி செய்யப்பட்டது. பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த மீரா மிதுன் டெல்லியில் இருப்பதாக அவரது தாய் மனு தாக்கல் செய்தார். அதில் டெல்லி நகர வீதிகளில் சுற்றிவரும் நடிகை மீரா மிதுனை மீட்கக்கோரி அவரது தாய் கூறியிருந்தார். இதனையடுத்து நடிகை மீரா மிதுனை கைது செய்து, ஆகஸ்ட் 11 ஆம் தேதி மீரா மிதுனை ஆஜர்படுத்த வேண்டும் என சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறாக பேசிய புகாரில் நடிகை மீரா மிதுனை டெல்லியில் வைத்து ஆகஸ்டு 4ல் போலீசார் கைது செய்தனர். நடிகை மீரா மிதுன், டெல்லி மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். கடும் மன அழுத்தத்தில் அவர் சிகிச்சையில் உள்ளதால், அவரை சென்னைக்கு அழைத்துவர இயலவில்லை என்றும் காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.

