"த்ரிஷா இடத்தில் நான் இருந்தால் ஒதுங்கி கொள்வேன்" - நடிகை அம்பிகா
த்ரிஷா இடத்தில் நான் இருந்தால் ஒதுங்கி கொள்வேன் என நடிகை அம்பிகா கூறியுள்ளார்.
நடிகர் விஜயும் நடிகை த்ரிஷாவும் நீண்டகாலமாக நல்ல நண்பர்களாகவும், திரைப்படங்களில் முன்னணி ஜோடியாகவும் வலம் வருகிறார்கள். விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பதவியேற்ற விழாவிலும், சுதந்திர தின விழாக்களிலும் த்ரிஷா கலந்துகொண்டு விஜயின் குடும்பத்தினருடன் பேசி மகிழ்ந்த காட்சிகளும் வெளியானது. மார்ச் 2026-ல் ஒரு திருமண நிகழ்வில் இருவரும் ஒன்றாக ஒரே நிறத்தில் உடை அணிந்து பங்கேற்றதும் பல்வேறு சர்ச்சையை ஏற்படுத்தியது. இவர்களின் நட்பு மற்றும் தொடர்ந்து ஒன்றாகப் பொதுமக்களின் கண்களில் படுவது குறித்து பலவிதமான கிசுகிசுக்களும் சமூக வலைதளங்களில் வதந்திகளும் பரவி வருகின்றன. ஆனால், தாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே என்று இரு தரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இங்கிலாந்தில் உள்ள சில்வர்ஸ்டோன் (Silverstone) பந்தயக் களத்தில் நடிகர் அஜித் குமார் கலந்து கொண்ட 'மிச்செலின் லே மான்ஸ் கப்' (Michelin Le Mans Cup) நிகழ்வில் முதல்வர் விஜயும், நடிகை த்ரிஷாவும் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் த்ரிஷா குறித்து கருத்துக் கூறியுள்ள நடிகை அம்பிகா, “நடிகை த்ரிஷா அவருடைய நண்பருடன் வெளியே செல்கிறார். ஒருவேளை இருவருக்கும் நட்பு இருக்கிறது, எவ்வளவு விமர்சனம் வந்தாலும் அதை நாங்கள் வெளியே காட்டுவோம் என்று இருவரும் நினைக்கலாம். ஆனால் விஜய் இப்போது ஒரு பதவியில் இருக்கிறார். அவருக்கு நம்முடைய உறவால் ஒரு அவப்பெயர் வந்து கொண்டிருக்கிறது என்றால் நான் த்ரிஷா இடத்தில் இருந்தால் கண்டிப்பாக விஜய்க்கு மேலும் தர்ம சங்கடமாக்கும் வகையில் நடந்து கொள்ள மாட்டேன். ஒதுங்கிக் கொள்வேன். லண்டன் சென்றது குறித்தோ, ஒரே மாதிரியான உடை அணிவது குறித்தோ எழும் விமர்சனங்களை பொறுத்தவரை, த்ரிஷாவின் இடத்தில் நான் இருந்திருந்தால், எதிர்மறை விமர்சனம் வரும் என்றால், உடன் செல்வதை தவிர்ப்பேன். இது என்னுடைய கருத்து. நட்புக்கு மதிப்பு கொடுத்து நாமும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்” என்றார்.

