#BREAKING நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை
செக் மோசடி வழக்கில் நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

களவாணி, மஞ்சப்பை, கலகலப்பு உள்ளிட்ட பல் திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தவர் விமல்(41). கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான மன்னர் வகையறா திரைப்படத்திற்கு தயாரிப்பாளராகவும் நடிகர் விமல் இருந்துள்ளார். நடிகர் விமலின் தயாரிப்பு நிறுவனத்தின் மேலாளராக சிங்காரவேலன் இருந்து வந்தார். மன்னர் வகையறா படத்தை தயாரிப்பதற்காக பைனான்சியர் கோபியிடம் இருந்து சிங்காரவேலன் மூலமாக ஒப்பந்தத்தின் அடிப்படையில் 5 கோடி ரூபாய் பணத்தை விமல் பெற்றுள்ளார். மேலும் விமலின் நிறுவனம் பெயரில் வங்கி கணக்கு தொடங்கி, அந்த கணக்கை சிங்காரவேலன் கவனித்து வந்துள்ளார். மேலும் மன்னர் வகையறா திரைப்படம் ரிலீஸ் ஆனவுடன், விற்பனை தொகையை பைனான்சியர் கோபியிடம் வழங்கி கடனை அடைப்பதாகவும், மீதமுள்ள பணத்தில் நிறுவனத்தில் பணியாற்றிவர்களுக்கு பிரித்து கொடுத்துவிடுவதாகவும் கூறி நடிகர் விமலிடம் பல பத்திரங்களில் சிங்காரவேலன் கையெழுத்து பெற்று கொண்டுள்ளார். இதனையடுத்து மன்னர் வகையறா படம் ரிலீஸ் ஆனவுடன் நஷ்டம் அடைந்ததாக கூறி சிங்காரவேலன் பைனான்சியர் கோபிக்கு கடனை திருப்பி தராமல் மோசடி செய்துள்ளார். இதனால் பைனான்சியர் கோபி கடனை கேட்டு விமலிடம் தொந்தரவு கொடுத்ததுடன், மன்னர் வகையறா என்ற படத்திற்காக விமல் வாங்கிய ரூ.4.5 கோடி தொகையில் ரூ.3.06 கோடியை திருப்பி தரவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்
படத்தயாரிப்புக்கு பெற்ற ரூ.3.06 கோடியை 18% வட்டியுடன் கோபிக்கு திருப்பிச் செலுத்த நடிகர் விமலுக்கு உத்தரவு பிறப்பித்தது.
ஆனால் விமல் அந்த பணத்தை வழங்கவில்லை. 'மன்னர் வகையறா' படத்துக்காக 4.5 கோடி கடன் பெற்றதற்கு விமல் கொடுத்த செக் பணமின்றி திரும்பியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து செக் மோசடி வழக்கில் ஈடுபட்டதற்காக நடிகர் விமலுக்கு சென்னை நீதிமன்றம் ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது.நடிகர் விமல் மேல்முறையீடு செய்வதற்காக ஒரு மாதம் தண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

