ஒரு நல்ல நடிகரை சினிமா இழந்திருக்கிறது - சரத்பாபு மறைவிற்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல்

 
kamal

நடிகர் சரத்பாபு மறைவிற்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரபல நடிகர் சரத்பாபு காலமானார். அவருக்கு வயது 71. முத்து, அண்ணாமலை உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ள பிரபல நடிகர் சரத்பாபுவிற்கு கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நலக் குறைவு ஏற்பட்டு ஐதரபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தற்போது அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ள இவர், 1973ல் தெலுங்குத் திரைத்துறையில் நடிகனானார். அதன்பின்பு தமிழில் நிழல் நிஜமாகிறது என்ற கே பாலசந்தர் திரைப்படத்தில் நடித்து தமிழுக்கு அறிமுகமானார். இது வரை 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார். சிவாஜி கணேசன், கமல்ஹாசன், ரஜினிகாந்த், சிரஞ்சீவி ஆகியோரோடு இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

இந்நிலையில், நடிகர் சரத்பாபு மறைவிற்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளதாவது: சிறந்த நடிகரும், அருமை நண்பருமான சரத்பாபு இறந்துவிட்டார். அவருடன் இணைந்து நடித்த நாட்கள் என் மனதில் நிழலாடுகின்றன. தமிழில் என் குருநாதரால் அறிமுகப்படுத்தப்பட்டவர். காலத்தால் அழியாத பல பாத்திரங்களை ஏற்று சிறப்பு செய்தவர். ஒரு நல்ல நடிகரை சினிமா இழந்திருக்கிறது. அவருக்கு எனது அஞ்சலி. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.