மோசடி வழக்கில் நடிகர் அஜய் வாண்டையார் கைது..
அதிமுகவை சேர்ந்தவரும் தொழில் அதிபருமான நடிகர் அஜய் வாண்டையார் மீது நுங்கம்பாக்கம் போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் கடந்த 22ம் தேதி மதுபானக்கூடம் ஒன்றில் நடைபெற்ற தகராறில் , அஜய் வாண்டையார் மதுபோதையில் மற்றொரு தரப்பினரை தாக்கி வன்முறையில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் அஜய் வாண்டையார் மீது பட்டினப்பாக்கம், எழும்பூர் காவல் நிலையங்களில் வழக்கு உள்ளது. மேலும் இந்த புகார் தொடர்பாக அஜய் வாண்டையார் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே கைதாகி சிறையில் இருக்கும் நடிகர் அஜய் வாண்டையார் மீது நுங்கம்பாக்கம் போலீசார் மேலும் ஒரு மோசடி வழக்கை பதிவு செய்துள்ளனர்.

ஹைதராபாத்தில் உள்ள தொழிலதிபரிடம் பண மோசடி செய்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹைதராபாத் தனியார் நிறுவன உரிமையாளர் பரத்குமார் என்பவரிடம் இருந்து ரூபாய் 2.11 கோடி வாங்கிக் கொண்டு ஏமாற்றியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரை அடுத்து நுங்கம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து இருக்கின்றனர். அரசிடமிருந்து சிறப்பு சலுகைகளை வாங்கி தருவதாக கூறி பரத்குமாரிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாகவும், பணத்தை திருப்பி கேட்டால் மிரட்டுவதாகவும் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த வழக்கு தொடர்பாக அஜய் வாண்டையாரை காவலில் எடுத்து விசாரிக்கவும் காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.


